~
யாரும் நிர்கதியான நிலையில் இல்லை. யாரும் சோகங்களையும், பாரங்களையும் சுமந்து கொண்டே வாழ்ந்து தீர வேண்டிய கட்டாயமில்லை. மயக்கத்திலாவது நீண்ட நேர உறக்கம் கிடைக்கும் உடலமைப்பில் தான் நாம் வடிவமைக்கப்பட்டு இருக்கிறோம். இங்கு இழப்பென்று நினைத்த எத்தனையோ வக்கிரங்களைக் கடந்தும் கோடான கோடி பேர் வாழ்ந்து விட்டுப் போயிருக்கிறார்கள்.
நிஜத்தில் மீளாத்துயர் என்பது நம் இன்மை மட்டுமே. மரணத்திற்கு பின் நாம் இழக்கும் நம் சுயமும், சுற்றமுமே பேரிழப்பென்று புரிய நிறைய இழப்புகளுக்குப் பழக வேண்டியுள்ளது. அதற்குள் மரணத்தின் மீதான பயமும், தயக்கமும் உருவாகிவிடும். வலிகளென்று இயற்கை நமக்குத் தந்துள்ள மன, உடல் வலிகளிலிருந்து மீள இடைவெளிக்கு ஒவ்வொருவர் ஏதாவது ஒன்றை வைத்துக் கொள்வது நல்லது.
சினிமா, பாடல், புத்தகம், உணவு, கடவுள் என்று எந்த விதமான இளைப்பாறுதல்களை வேண்டுமானாலும் பற்றிக் கொண்டு நம்மை நாமே மீட்டெடுத்துக் கொள்வதைத் தவிற வேறு வழி எனக்கு தெரியவில்லை. தற்கொலை செய்து கொள்பவர்களுக்குப் பின்னே, தனக்கு நெருக்கமான மனிதர்களின் வாழ்வை பற்றிய சிந்தனை இருந்தால் இங்கு நிறைய பேருக்கு அந்த எண்ணமே வராது.
உலகின் அத்தனை விசயங்களை விடவும் ஒவ்வொரு மனிதனுக்கும் தனக்குக் கட்டாயமான ஒரு விசயம் இருக்கிறது. அதுதான் சுயம். தன்னைத் தவிற அத்தனை நியாய, அநியாயங்களையும் ஒதுக்கி வைத்து வாழ எத்தனிப்பது தான் இவ்வுலகிற்கு அவர்கள் செய்யக்கூடிய அடிப்படை அறமென்று நம்புகிறேன். நாமாய் சாகாமல் வாழ்ந்து விடுவதை விட மிகப்பெரிய வெற்றி எதுவுமில்லை.
துக்கம் தொண்டையை அடைக்கும் நிலையிலோ, துரோகத்தைத் தாண்ட முடியாத விளிம்பிலோ, வலியின் உச்சகட்ட மயக்கத்திலோ, உறவின் மீதான தீராத வருத்தத்திலோ, செழிப்பின் இழப்பிலோ, சாகத் துணியும் நிலையிலோ கூட நாமிருக்கலாம். நாம் இருக்கிறோம் என்ற ஒரு நம்பிக்கையில் இருந்தால், அத்தனையில் இருந்தும் மீண்டு இருந்துவிட முடியும்.
"இருந்து என்ன ஆகப் போகிறது, செத்துத் தொலையலாம்.
செத்து என்ன ஆகப் போகிறது, இருந்தே தொலையலாம் - வண்ணதாசன்"

No comments:
Post a Comment