Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Tuesday, March 10, 2026

ஒன்றுமில்லை


~
இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள்.
மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவியாய் வந்து விழும்  வகிடில் சிக்காத கூந்தலை வயலின் வாசிப்பதைப் போல எடுத்துப் போட்டுக் கொண்டே பேசிக்  கொண்டிருக்கிறாள்.

நீச்சல்குள நீரின் மேல் உலர விடப் போட்டிருக்கும் வேட்டிகளாய் ஆடை விட்டிருந்தது தேநீர்.
அதில் ஆங்காங்கே பாட்டிக் கண்ணங்களாய் சில சுருக்கங்கள்.
கொள்ளை அழகு பொழியும் வனமென்று சரளமாய் வந்து விழும் வார்த்தைகளுக்கு மத்தியில், உதடசைவின் அதிர்வை மட்டுமே உணர முடிந்தது.

இராட்டினத்தைக் காணும் சிறுவனாய் பிரம்மாண்ட பேச்சைப் பூரிப்போடு கேட்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இருள் அடையத் தொடங்கும் போதே வார்த்தைகள் பார்வைக்கு அப்பால் நகரத் தொடங்கியிருந்தது.
கிளியமர்ந்து பறந்த சோளக்காடாய் நிமிர்ந்து அமர்ந்து வார்த்தைகளை பூரிப்போடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

உணர்வோடுதான் கேட்கிறானா என்ற குழப்பத்தில் புருவம் உயர்த்தி 'என்ன?' என்பதாக கேள்வி கேட்டாள்.
பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் கற்பூரமாய் காணாமல் போக, வலுவிழந்த ஏவுகனையாய் தரையிறங்கியது மனம்.
அன்று நான் சொன்ன 'ஒன்றுமில்லை' என்ற பதிலில் எல்லாமும் இருந்தது.

❣️

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...