Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Saturday, May 16, 2026

இரயிலும் - காலமும்


~
2015 சமயத்தில் தன்பாதிலிருந்து ஆலப்புழா செல்லும் ரயிலில் கோயம்புத்தூரை கடந்து சென்று கொண்டிருந்தோம். கடுமையான கூட்டத்தின் காரணமாக படியில் அமர்ந்து பயணம் செய்த ஒருவர் தண்டவாளத்தில் தவறி விழுந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நான் கண் முன்னே பார்த்த முதல் கோரவிபத்து அதுதான்.

சேலத்தில் எங்கள் கடைக்கு எதிரில் சென்னை - கோவைக்கான இரயில் தண்டவாளங்கள் இருக்கும். அருகில் ஊர்கள் பெரிதளவில் இல்லாத காரணத்தாலும், அது பெரிய வளைவு என்பதாலும் அடிக்கடி விபத்து நடக்கும் பகுதியாகவே இருந்து வந்தது. நிறைய மனித, விலங்குகளின் மரணங்களை அந்த இடத்தில் அடிக்கடி பார்க்க வேண்டியதாயிருந்தது.

இதையெல்லாம் பார்த்து ஒரு கட்டத்தில் பழகிப்போன எனக்கு விபத்துகளும், மரணங்களும் பயம் தருமளவில் இருந்து தொலைவாகி இருந்தது. அதே காலகட்டத்தில் அப்பாவின் வற்புறுத்தலினாலும், அவரின் தனிப்பட்ட காரணங்களுக்காகவும் விருப்பமின்றி அடிக்கடி கேரளாவிற்கு இரயிலில் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் இருந்தது.

வருடத்திற்கு பத்து முறைக்கு மேல் இந்த நெடுந்தூர பயணம் அப்பாவோடோ, தனியாகவோ இருந்தாலும் ஒருமுறை கூட முன்பதிவு பயணச்சீட்டை கண்ணில் பார்த்ததில்லை. எப்போதுமே முன்பதிவில்லாத பெட்டியில் கூட்டத்தில், படிக்கட்டில் அமர்ந்தே பயணம் செய்து பழகியதால் கொஞ்சம் கொஞ்சமாக இரயில் பயணத்தின் மீதான சலிப்பு அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

சரியாக டிக்கெட்டுக்கான அதுவும் முன்பதிவற்ற டிக்கெட்டுக்கான பணத்தோடு மட்டும் பயணம் செய்வது, சிறிய இடைவெளியில் இரண்டு மூன்று ரயில்கள் மாறி மாறி பயணம் செய்வது, கூட்டநெரிசலில் பயணம் செய்வது, சிறுவயதில் தனியாக பயணம் செய்வது, மொழி தெரியாத ஊர்களுக்கு நடுவே பயணம் செய்வது என்று இரயிலைப் பற்றி யோசிக்கத் தொடங்கினாலே பதட்டமாகும் அளவுக்கு இரயில் பயணத்தின் ஒவ்வாமையை உணர்ந்திருந்த நேரம் அது.

2017-ல் வீட்டை விட்டு வெளியேறிய நிலையில் இரயிலில் செல்வதற்கான தேவைகள் குறைந்திருந்தது. அப்பொழுதும் நான் வேலை பார்த்த மளிகைக் கடைக்கு அருகில் உள்ள தண்டவாளத்தில் இரயில்கள் செல்லும் போது கொஞ்சம் பதட்டமாகும். பயணத்தின் மீதான ஆர்வம் கூட சிலநேரம் இரயிலின் மீதான சலிப்பால் குறைந்து விடும். இதற்கெல்லாம் அப்பாதான் காரணம் என்று சொல்லி விட முடியாது என்றாலும், அவர் ஒரு மிகமுக்கிய காரணம் என்பதும் உண்மை.

சென்னைக்கு வந்த பிறகு வெகுநாட்கள் கழித்து முதல்முறை நண்பர் ஒருவரோடு வேலை விசயமாக விசாகப்பட்டினத்திற்கு இரயிலில் சென்றேன். முதல்முறை ஒரு நிறைவான, பதட்டமில்லாத இரயில் பயணத்தை அப்போதுதான் அனுபவித்தேன். நிம்மதியாக தூங்கி எழுந்த இரயில் பயணம் என்று கூட சொல்லலாம். சென்னை வந்து ஐந்து வருடத்தில் அதிகபட்சமான பயணங்கள் பேருந்திலும், கார்களிலுமே இருந்துள்ளது. பணப்பற்றாக்குறையில் கூட இரயில் பற்றி யோசித்ததில்லை.

கடந்த ஆறுமாத காலமாக இரயில் நிலையத் தொடர்புகள் அதிகமாகி விட்டது. வேலையும், பழக்கவழக்கங்களும் அது சார்ந்தே இருப்பதால் இரயில் நிலையங்களின் ஒவ்வொரு இடத்திலும் நடந்து திரிந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏழெட்டு வருடங்களுக்கு பிறகு இரயில் சார்ந்த விசயங்கள் பழக்கமாகிறது. பிடிக்கத் தொடங்கியிருக்கிறது. நள்ளிரவில், நடுக்காட்டில் தண்டவாளத்தில் வேலை செய்யும் போதும் கூட ஏதோ நிறைவாய் இருக்கிறது.

இப்போது அரக்கோணம் சந்திப்பில் வேலை முடித்துவிட்டு சென்னை திரும்பிக் கொண்டிருக்கிறேன். ஒரு மாதமாக அரக்கோணத்தில் வேலை செய்வதால் அடிக்கடி இரயில் பயணம் செய்வதும், இரயில் நிலையத்திலேயே இருப்பதுமாக பொழுது போகிறது. அதிகாலையில் முதல் இரயிலில் தனியே நடந்து திரிவது புதிய அனுபவமாயிருக்கிறது. முதல்முறை இரயிலையும், இரயில் பயணத்தையும் விரும்பத் தொடங்கியிருக்கிறேன். ஒரு கட்டத்தில் பைக் அல்லது பஸ்ஸையே தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்த எனக்கு முதல்முறை இரயிலும் ஒரு தேர்வாக இடம்பெறத் தொடங்கியிருக்கிறது.

நான் இந்த ஒன்றில் மட்டும் என் தந்தையை மன்னிக்கத் துவங்கியிருக்கிறேன். இப்படி ஏலியனுக்கும், சலூன் கடை கண்ணாடிக்கும், பெல்ட் செருப்புக்கும், சோடா பாட்டிலுக்கும், பாத்திரக் குவியலுக்கும், கபடி விளையாட்டுக்குமென்று ஒவ்வொன்றாக மன்னித்து முடித்து நேசிக்க நினைப்பதற்குள் காலம் முடிந்துவிடும் போல. உங்கள் குழந்தைகளுக்கு பேரன்பைத் தர தவறினாலும், எதன் மீதான பதட்டத்தையும் உட்குலைவையும் தந்து விடாதீர்கள். அது காலத்தை உருக்குலைத்து நிறுத்தி விடும். என் ஏழு வருட இரயில் பயணத்தை அதுதான் தின்றிருக்கிறது. 

#TimeHeals 🚊❣️

No comments:

Post a Comment

இரயிலும் - காலமும்

~ 2015 சமயத்தில் தன்பாதிலிருந்து ஆலப்புழா செல்லும் ரயிலில் கோயம்புத்தூரை கடந்து சென்று கொண்டிருந்தோம். கடுமையான கூட்டத்தின் காரண...