~
"உடலுக்குள் இருக்கும் உயிர் சுமையா. அந்த கழுத்து தேமலையும் காதோர மச்சத்தையும் பார்ப்பதெப்போ" என்று ஏக்கங்களின் உச்சத்தில் வாழக் கூடியவன். பெண்பித்தன் என்றாலும் பேனாவிலும் அவன் பித்தன்தான்.
"தாயருகே சேயாகி, தலைவனிடம் பாயாகி, சேயருக்கே தாயாகும் பெண்ணே" என்னும் போது பெண்ணையும், பெண்மையின் வாழ்வியல் பயணத்தையும் எப்படியெல்லாம் அழகியல் கூட்டிக் கொண்டாட முடியுமென்று இந்த கலைஞனுக்கு தெரிந்திருக்கிறது என்றுதான் சொல்ல தோன்றும்.
கலைஞனென்று குறிப்பிடுவதுதான் சரி. எதையும் உருவாக்குபவன், அழகூட்டுபவன், மிகைப்படுத்தி கொண்டாடுபவன் நிச்சயம் கலைஞன்தான். "பூவின் மொழி நிறமா, மணமா" "கடலிலே மழை வீழ்ந்த பின் எந்த துளி மழைத்துளி" என்று கேள்வி கேட்பதும் கூட அதில்தான் சேரும்.
"வானத்தில் ஏறி மின்னலை பிடிப்பவன். பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்" என்று சொல்லி விட்டு "இந்த பூமியே பூவனம், உங்கள் பூக்களைத் தேடுங்கள்" என்று பூக்களையே காதலின் பிரதானமாய் காதலர்களுக்கு பழக்கப்படுத்தியவன்.
கண்ணாளனே பாடலின் "கண்ணாளனே" வார்த்தை பற்றி ஒரு மேடையில் வைரமுத்து விவரித்துக் கொண்டிருப்பார். அந்த காணொளியின் கடைசியில் வார்த்தைக் கிடைத்து விட்ட மகிழ்ச்சியை அவர் "ஏப்ரல் மாதத்து செம்பரம்பாக்கமாக எங்களின் முந்தைய கோபமெல்லாம் ஆவியாகி விட்டது" என்று குறிப்பிடுவார்.
ஒரு கலைஞனுக்கு ஒரேயொரு வார்த்தை கிடைக்க சில நாட்களும் ஆகலாம். ஒரு கவிதையே கூறி விட ஒரு நொடியும் போதுமாயிருக்கும். எப்படியென்றாலும் சரி. கலைனின் படைப்பென்பது எப்போதும் வாழ்ந்து கொண்டிருக்கும். வைரமுத்து வைரம்தான்..!
#HBD_Vairamuthu...♥✨


No comments:
Post a Comment