~
நா.முத்துக்குமார் பிறந்தநாள்..❤
பாடல்களைப் பற்றி Clubhouse-ல் ஒருமுறை பேசிக் கொண்டிருந்த போது வாழ்நாளுக்கும் ஒரேயொரு பாடல் அல்லது வரியென்றை தேர்ந்தெடுத்து சொல்லச் சொன்னார்கள்.
அந்த குழுவில் இருந்த அதிகபட்சமானவர்கள் சொன்ன வரி அல்லது பாடல் நா.முத்துக்குமாரின் ஒரேயொரு பாடல்.
"எத்தனைக் கோடி கண்ணீர் மண் மீது விழுந்திருக்கும். அத்தனை கண்ட பின்னும் பூமி இங்கு பூ பூக்கும்".
இசையாகவே காதலை ஒப்பிட்டுக் கொண்டாடியன் நா.மு.
"நீ கைகால் முளைத்த மத்தளமா, உன்ன வாசிக்க பின்னால் சுத்தனுமா. நீ ஹார்மோனிய கட்டையம்மா, என் ஹார்மோன் செய்யுது சேட்டையம்மா"
எது அழகென்றெல்லாம் அவர் விவரிக்கவில்லை. தான் அறிந்த எல்லாமே அழகானதென்று கொண்டாடியவர்.
"நன்மைக்கு சொல்லிடும் பொய்களும் அழகு, உண்மையில் அதுதான் மெய்யாய் அழகு".
என்ன செய்து விடும் எதார்த்தமாய் நிகழ்ந்த காதல் என்பதற்கு சட்டைப் பையிலேயே பதிலை வைத்திருப்பார் போல.
"பார்த்து பழகிய நான்கு தினங்களில், நடைஉடை பாவனை மாற்றி விட்டாள்".
காதலியென்றதை கடந்து தோழியென்று அவளை அடையாளப்படுத்திக் காதலித்தவன்.
"தோழி உந்தன் கரங்கள் தீண்ட தேவனாகி போனேனே"
"தோளில் சாயும் போது தோழி நீயடி, மடியில் சாயும் போது தாயும் நீயடி"
அவனைக் கொண்டாடித் தீர்க்குமளவுக்கு இவ்வுலகிலேயே காதலில்லை. அவ்வளவு காதலைக் கொண்டவன்.
"மழையில் கழுவிய மணலிலே தொலைந்த காலடி நானடி.
முகத்தை தொலைத்த என் வாழ்வுக்கு நிலைத்த முகவரி நீயடி"
எளிமையாக ஏழைக்காதலை புரிய வைத்து, காதல் செய்யவும் வைத்த கவிஞன்.
"முதன்முறை வாழ பிடிக்குதே, முதன்முறை வெளிச்சம் பிறக்குதே. முதன்முறை உதிர்ந்த கிளையொன்று பூக்குதே".
அவனோர் பேரன்பு கொண்ட தந்தை. குழந்தையை பாவிக்கும் அவன் செய்கையில் கடவுளுக்கும் பொறாமைதான்.
"அடி கோயில் எதற்கு, தெய்வங்கள் எதற்கு. உனது புன்னகை போதுமடி".
உயிரோட்டமான விசயங்களை சின்னஞ்சிறிய வாக்கிய வடிவமைப்பில் தருபவர் நா.மு.
"வழிப்போக்கனின் வாழ்விலே நிழலாக வருகிறாய்". அங்கே வழிப்போக்கனுக்கு தெரியும் அந்த வரியின் அழுத்தம்.
என் ஊர் நியாபகத்தை தூண்டிவிடும் சாயலில் ஒரேயொரு நா.முத்துக்குமார் பாடலென்று அடையாளம் காட்டச் சொன்னால்,
"எங்க ஊரு மேகமெல்லாம் எப்பவாச்சும் மழை பெய்யும்.
அப்ப நாங்க மின்னனுல போட்டோ புடிப்போம்"
நான் எப்போதும் என்னிடம் சொல்லிக் கொள்ள நா.முத்துக்குமாரின் ஒரு வரியை கையில் வைத்திருப்பேன்.
"இன்பம் ஒருபுறமென்று, துன்பம் ஒருபுறமென்று சுற்றிச் சுழலுது இந்த மண்மேலே.
தன்னந்தனி ஆளென்று யாரும் இங்கில்லையென்று உள்ளம் சொல்லுது இன்று அன்பாலே"
ராம் சொல்வதைப் போல "ஒரு கோப்பை தேநீர் அருந்தும் அவகாசத்தில் ஒரு ஆயுள் கால நட்பை உருவாக்கக் கூடியவன்" தான் நா.முத்துக்குமார். நா.முத்துக்குமாரை பாடலாசியர் என்று எடுத்துரைக்காதீர்கள்.
அவர் இந்த சகாப்தத்தின் பிரம்மாண்டமில்லாத கவிஞர்...♥


💚
ReplyDelete