Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Monday, July 19, 2021

மரியான் (2013)





மரியான்.


கடல், காதலென்று பிரிக்காமல் இரண்டையும் ஒன்றாய் புகுத்திய படம். எனக்கேயென்று ஆசுவாசமாக உணரக் கூடிய படம். இளைப்பாறுவதற்கும், எத்தனையோ ஜன்னலோர பயணத்திலும் நான் தேடிப் பார்த்த படம்.


பார்வதியை மரியான் படத்தில் காட்டியதை விட அழகாக வேறெதிலும் காட்டி விட முடியாதென்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒருத்தியால் இவ்வளவு காதலிக்க முடியுமா என்பதற்கு அவள் கண்களே பதில்.


"நீ இருக்கீல. போதும்..!"


இதெல்லாம் எப்படியான அபரிமித அன்பின் நிமித்தம் என்று யோசித்துப் பார்க்கத் தோன்றுகிறது. பனி கொண்டாடத் துவங்கிய பின்னே மரியான் பேரழகாகிறான்.


"உன்னால இல்ல. உனக்காக"


எல்லா காதலின் வெளிப்பாடும் தான் ஏதோவொன்றை நிகழ்த்தி விட்டு உன்னால் இல்லை என்பதாக விளக்கவே விளைகிறது. அதில் உனக்காக என்பதை எடுத்துக் கொடுத்ததற்கு காதல்கள் நன்றி சொல்ல வேண்டும்.


"கடல்ரா.. கடல்"


என்னை பிரம்மிக்கச் செய்தவொன்று, எனக்கு பலமாய் இருக்கும் ஒன்று, என் எல்லா நேரத்து துணையாகவும் தேடக் கூடிய ஒன்று, என் தேவையாக எப்போதும் குறிப்பிட்டுக் காட்டக் கூடிய ஒன்று என் கடல்.


"நெத்திலி கொழம்பு வாட, நீரோடி காத்துல வீசுமய்யா!"


யுவன் குரலும், ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் சேர்ந்து ஊர் வீதியில் ஆடித் திரிந்ததை எப்போதும் ஞாபகம் வைத்திருக்க எனக்காக ஒரு பாடலை பாடிக் கொடுத்திருக்கிறார்கள்.


ஏனெதற்கு என்று கேள்வி கேப்பாடில்லாமல் என்னால் சகட்டு மேனிக்கு கடலையும், காதலையும் கொண்டாடித் தொலைக்க முடியும். அப்படியே மரியானையும்.


"வானே நீயின்று அந்த நேற்றுகளைக் கொண்டு வா!"

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...