~
எதையோ எழுதச் சொல்கிறது மனது. இதுதான் என்று தீர்மானம் செய்வதற்குள் திசை மாறி விடுகிறது. நான் மகிழ்வாய் இருக்கிறேன். இல்லை, வேலை தேடிக் கொண்டிருக்கிறேன்.
நான் தொந்தரவாய் நினைப்பர்களை விட்டு விலகி விடுகிறேன். இல்லை, அன்பின் வார்த்தைகளை ஒவ்வொன்றாக இழந்து கொண்டிருக்கிறேன். நான் என் வாழ்வைக் கொண்டாடிக் கொண்டிருக்கிறேன். இல்லை, நாட்களை செலவு செய்து கொண்டிருக்கிறேன்.
என் ஒரு மணி நேர நடவடிக்கையே பல யோசனைகளுக்குள் ஆட்பட்டு விலகுகிறது. நான் செயலிழந்து போகாமல் ஆட என் கால்கள் முன்பைப் போல் இப்போது நிதானமாயில்லை போலும்.
நான் நிமிர்ந்து பார்த்த வானம் நெத்தி நோக்க மல்லாந்து படுத்து கிடக்கிறேன். நான் ஓய்வெடுக்கிறேனா, இல்லை அயர்ந்து விட்டேனா, என் வேலைதான் என்ன. என்னை நானே கேள்வி கேட்பதில் தான் எனக்கு எல்லா குழப்பமுமே என்று அவளை பார்த்துக் கேட்டேன்.
நான் நிஜமாகவே மகிழ்ச்சியாய் தான் இருக்கிறேனா, உனக்கு என்னை பிடிக்குமா மீரா என்றேன். "மியாவ்" என்றாள். அவள் தேவை இரண்டு மேரி பிஸ்கட், என் தேவை அந்த மியாவ். அன்பின் உயிர்களுக்கு இரண்டு கால்கள் மட்டுமே இருக்க வேண்டுமென்று அவசியமா என்ன. இப்போது சொல்கிறேன். நான் மகிழ்வாய் இருக்கிறேன்...!
மீரா என்னும் காதல்...❣️

No comments:
Post a Comment