Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Tuesday, March 10, 2026

ஒன்றுமில்லை


~
இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள்.
மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவியாய் வந்து விழும்  வகிடில் சிக்காத கூந்தலை வயலின் வாசிப்பதைப் போல எடுத்துப் போட்டுக் கொண்டே பேசிக்  கொண்டிருக்கிறாள்.

நீச்சல்குள நீரின் மேல் உலர விடப் போட்டிருக்கும் வேட்டிகளாய் ஆடை விட்டிருந்தது தேநீர்.
அதில் ஆங்காங்கே பாட்டிக் கண்ணங்களாய் சில சுருக்கங்கள்.
கொள்ளை அழகு பொழியும் வனமென்று சரளமாய் வந்து விழும் வார்த்தைகளுக்கு மத்தியில், உதடசைவின் அதிர்வை மட்டுமே உணர முடிந்தது.

இராட்டினத்தைக் காணும் சிறுவனாய் பிரம்மாண்ட பேச்சைப் பூரிப்போடு கேட்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இருள் அடையத் தொடங்கும் போதே வார்த்தைகள் பார்வைக்கு அப்பால் நகரத் தொடங்கியிருந்தது.
கிளியமர்ந்து பறந்த சோளக்காடாய் நிமிர்ந்து அமர்ந்து வார்த்தைகளை பூரிப்போடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

உணர்வோடுதான் கேட்கிறானா என்ற குழப்பத்தில் புருவம் உயர்த்தி 'என்ன?' என்பதாக கேள்வி கேட்டாள்.
பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் கற்பூரமாய் காணாமல் போக, வலுவிழந்த ஏவுகனையாய் தரையிறங்கியது மனம்.
அன்று நான் சொன்ன 'ஒன்றுமில்லை' என்ற பதிலில் எல்லாமும் இருந்தது.

❣️

Saturday, March 7, 2026

பெண்கள் தினம்


~
பெண் என்பவள் என்று நிறைய விளக்கவுரைகள் சொல்லியும் முடியாத நீட்சியாக எப்போதும் பெண்ணைச் சுற்றிய, பெண்ணை பற்றிய கதைகள் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அடுத்தடுத்த தனக்கு நெருக்கமான மனிதர்களை இன்ன இதுதானென்று சொல்லி முடிக்கவியலாத அசாத்திய பிடிப்புகளை தந்து வளர்த்தெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்.

ஆணென்பது பிறப்பு, பெண்ணென்பது பவுசு என்று சொல்லுமளவுக்கு ஊர் மெச்ச எத்தனையோ பெண்களை பிள்ளையிலிருந்து, பாட்டி வரை பெருமையாய் பார்த்து வளர்ந்திருக்கிறோம். பெண் இல்லாத நிலை ஆகிப் போனால் ஆணென்பவன் அர்த்தமற்றுப் போவானென்று எப்போதும் தோன்றும். பெண்ணென்பவள் ஆறுதல், பெண்ணென்பவள் விதி. பெண்ணென்பள் பிரியம். பெண்ணென்றாலே திருவிழா.

கவிஞர் வெய்யில் ஒரு மேடையில் சொல்லியிருப்பார்.

"பெண் நிறைவாய் இருப்பவள். அவளுக்கு ஆண் இன்றி எல்லாமும் கிடைத்து விடுகிறது. ஆணிடம்தான் மிகப்பெரிய பிச்சைப் பாத்திரம் இருக்கிறது"

என் பிச்சைப் பாத்திரத்தை நிரப்பிய, அதனைப் பிடுங்கி தரையில் அமர்த்திய, அடித்து திருத்திய, ஆளாக்கி வழிநடத்திய, தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய அத்தனை தேவதைகளுக்கும் என் நன்றிக்கடன்களை உரித்தாக்குவேன். வாழ்வெனும் வானில் வண்ண விண்மீன்களாய் பிரகாசிக்கும் பிரியத்திற்குரிய அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

#HappyWomensDay ❤

Wednesday, March 4, 2026

நாமொரு இம்மி


~
இன்றோ, நாளையோ என்னும் சூழலில் நம் அழிவும், நமக்கான இரங்கலும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு நிறைய மனிதர்கள் கொத்து கொத்தாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களை ஏந்தி அல்லது தடுத்து போர் செய்வது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தனிப்பட்ட வெறுமையிலும், இடர்களிலும் நம்மை சுற்றி எத்தனையோ பேர்கள் தன்னுள்ளே அழிந்து கொண்டிருக்க நாமும் ஏதோவொரு விதத்தில் பங்கு வகிக்கிறோம் என்று அடிக்கடி தோன்றும். இவற்றில் பெரும்பான்மையான விசயங்களுக்கு வளர்ந்த ஒருவர் தர நினைக்கும் அழுத்தமோ, வளர நினைக்கும் ஒருவருக்கு கொடுக்கப்படும் அழுத்தமோதான் காரணமாய் இருக்கிறது. 

இவைகளுக்கு மத்தியில் நாமும் எதிர்மறையான விசயங்களை போகிற போக்கில் யார் யாரிடமோ தூவி விடத்தான் செய்கிறோம். எனக்கு நெருங்கிய நண்பரொருவர் பிரபஞ்ச அறிவியலைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பார். ஆரம்பத்தில் அதில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்த போதும் இப்போது என் நிறைவை தந்தது அந்த பிரபஞ்ச அறிவே. போதிய அளவு மன அமைதிக்கான வழியாக நான் தேர்ந்தெருத்த ஒரு சூத்திரமும் அது சார்ந்ததுதான். 

"நமக்கு நாமே ஒளி, நமக்குள் நம்மாட்சியே, பிரபஞ்சத்தில் நாமொரு இம்மி, நமக்கான மீட்சி நம்முள் நிறைவாயிருப்பதுவே"

நம்மிலிருந்து நேர்மறையாய் இருக்கத் தொடங்கினால், மென்மையான வாழ்வை நமக்கே அது திருப்பித் தரும். இப்பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு மிக மிக மிகச்சிறிய விசயமென்று யோசிக்கும் போது, அத்தனை எதிர்மறையும் அழிந்து அன்பை விதைக்க முடியுமென்று நிச்சயமாக நம்புகிறேன்! ❤

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...