Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, July 28, 2021

விதைக்கிளை - சிறுகவிதைகள்

 



~


கண்டிப்பாக ஒருநாள் இதை வாங்கி விடலாமென்றே எல்லா ஏங்கங்களும் ஷாப்பிங் மாலில் கண்ணாடி துடைத்துக் கொண்டிருக்கிறது..!


////


இருந்த இருபதும் செலவாகி விட்டது என்பது திடீர் நியாபகமாய் வர, குடித்துக் கொண்டிருக்கும் பிரியமான தேநீரும் குரல்வளை நெறிக்கும். செலவான நாட்கள்..!


////


நான் பறந்து கொண்டிருந்த என் வானில் சில நாட்களாக போக்குவரத்து நெரிசல். இப்போதெல்லாம் எனக்கு சாதாரன சாலைகளில் நடந்து போவதே பேராசையாய் தான் இருக்கிறது.!


////


நீ எனக்கும் பிள்ளை போல்தான் என்றவள் முதல்மாத சம்பளத்தைப் பெறாமல் புறக்கணித்து, தன் பிள்ளை காசில் அவனுக்கு சட்டை எடுத்து மகிழ்கிறாள்..!


////


பெருவாரியான ஓட்டு வித்தியாசத்தில் பெண் வீட்டினரை வென்று விடுகிறான், யாரோவொருவனின் காதலைக் கையில் வைத்திருப்பவளுக்கு தாலி கொடுப்பவன்..!


////


ஏதோவொரு மூலையில் கிறுக்கி விளையாடிக் கொண்டிருந்தவளை வீடு முழுக்க என் பிள்ளை வரைந்தாலும் எனக்கு கவலையில்லை என்று ஊக்குவித்தான் அந்த சுண்ணாம்பு வாங்க வழியில்லாத குடிகாரத் தந்தை..!


////


எல்லோரும் தேடுவதுதானே. எனக்கென்று ஓர் கூடு. எப்போதும் சிரிக்க ஓர் பறவை. காதலாய் காற்று. வானமாய் சிறகடிக்க வாழ்வு. இதற்கிடையில் என் வனத்தில் மட்டும் ஏன் இத்தனை வேட்டை.!


////


தவறுதலாக ஸ்லீப்பர் கோச்சிற்குள் ஏரிய முன்பதிவு செய்யாத பெட்டியில் வந்த குழந்தை அடுத்த ஸ்டாப்பிங் வரைக்கும் ராஜாதான், அந்த கருத்தரித்தல் மையத்திற்கு செல்லும் தம்பதியருக்கு..!


////


வெயில் கொளுத்துகிறதென்று வாசலுக்கு சென்று எதிர்க்காற்றில் தலைக் காட்டினேன். சாரல் தூவியது. ஈரத்தில் சென்ற ரயில் நிலையத்தில் வந்த அதே பிரியாணி வாசம்..!


////


ஹாரன் அடித்துக் கொண்டே விலகச் சொல்லி இசைக்கிறார் இன்ஜின் ட்ரைவர், தண்டவாளத்தில் நின்றவர்களுக்கு அது மரணச் சங்காய் கூவியது..!


////


தாய், தந்தைக்கு தெரியாமல் எனக்கு மட்டும் டாட்டா காட்டுகிறது குழந்தை. அது முத்தமிட்ட ஈரம் கூட காயாத நிலையில் எங்களை பிரித்ததில் இரயில் தரப்பில் பாவம் சேராதல்லவா..!


////


மின்சார ரயிலில் புகைமூட்டம். கழிவரையில் யாரென்று கதவருக்கே தட்டிக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம்..!


////


எதிர் இருக்கையில் இருந்த குடுமிக்காரர் கால் மேல் கால் போட்டு ஒய்யாரமாக அமர்கிறார். இதை எனதருகே இருந்தவர் தன்னை சலூன் கடைக்காரர் என்று அறிமுகம் செய்வதற்கு முன் செய்திருந்தால் யாருக்கும் சந்தேகம் வந்திருக்காது..!


////


அதிலென்ன இருக்கிறது அதையே நோண்டிக் கொண்டிருக்கிறான் என் பேரன் என்று அவனை அறிமுகம் செய்தார் அந்த தாத்தா. அவனும் நானும் முகநூல் நண்பர்களென்பது அவருக்கு கொஞ்சம் அதிர்ச்சி. எங்களுக்கும் கூட.!


////


மரம், வீடுகள், தெருக்களெல்லாம் கடந்து போகிறதென்கிறேன். நாமெல்லாம் இப்படித்தானே வாழ்வில் நாம் கடந்து வந்த எல்லாவற்றையும் அது கடந்ததாக சுட்டிக் காட்டித் தப்பித்துக் கொள்கிறோம்..!


///


செருப்பு வாங்க வழியில்லாதவர்கள் வாழும் இடத்தில்தான் ஆங்காங்கே ஆய்..!


////


ஏன் இவ்வளவு நேரம் என்று அதட்டுபவளை பார்த்து ஏளனமாகச் சிரிக்கிறான் பிள்ளை. கடன் வாங்கச் சென்றதனால் தாமதமாக்கி சிரித்த அதே மளிகைக் கடைக்காரனின் சிரிப்பு..!


////


சுழலாத சக்கரத்தில் இருந்துதான் நான் வெளியேற முடியவில்லை, சுழலும் போதும் உன்னால் வெளியேற முடியவில்லையே என்று நக்கலடித்தான். அந்த அறையில் காற்றாடியும், அவனும் பேசிக் கொள்வதை இரண்டு வருடங்களாக அந்த வீல்சேர் கேட்டுக் கொண்டிருக்கிறது..!


////


எப்போதும் அவர் பணம் வைத்து விட்டுச் செல்லும் சட்டையை இன்றுதான் அணிந்து பார்த்தான். முதல் மாதச் சம்பளத்தை தந்தை படத்திற்கு வைத்து கும்பிட்ட மகன்..!


////


ஸ்மைல் ப்ளீஸ் என்கிறான். துவண்ட நிலையில் அவள் கண்கள் இவனைக் கொல்கிறது. காதலியின் திருமணத்தில் கேமராவோடு இன்ஜினியர். !


////


வெறும் காசுதானே என்று அசட்டிக் கொள்பவன், வேலைக்கு நேரமாகிறது என்று ஓடும் நிலையில் இருக்க மாட்டான்..!

////


நீடித்த ஜலதோஷம். தூக்கத்தின் விளிம்பில் மூக்கடைப்பு. வீடு முழுக்க தேநீர் வாசம்..!


No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...