~
இன்றோ, நாளையோ என்னும் சூழலில் நம் அழிவும், நமக்கான இரங்கலும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு நிறைய மனிதர்கள் கொத்து கொத்தாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களை ஏந்தி அல்லது தடுத்து போர் செய்வது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.
தனிப்பட்ட வெறுமையிலும், இடர்களிலும் நம்மை சுற்றி எத்தனையோ பேர்கள் தன்னுள்ளே அழிந்து கொண்டிருக்க நாமும் ஏதோவொரு விதத்தில் பங்கு வகிக்கிறோம் என்று அடிக்கடி தோன்றும். இவற்றில் பெரும்பான்மையான விசயங்களுக்கு வளர்ந்த ஒருவர் தர நினைக்கும் அழுத்தமோ, வளர நினைக்கும் ஒருவருக்கு கொடுக்கப்படும் அழுத்தமோதான் காரணமாய் இருக்கிறது.
இவைகளுக்கு மத்தியில் நாமும் எதிர்மறையான விசயங்களை போகிற போக்கில் யார் யாரிடமோ தூவி விடத்தான் செய்கிறோம். எனக்கு நெருங்கிய நண்பரொருவர் பிரபஞ்ச அறிவியலைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பார். ஆரம்பத்தில் அதில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்த போதும் இப்போது என் நிறைவை தந்தது அந்த பிரபஞ்ச அறிவே. போதிய அளவு மன அமைதிக்கான வழியாக நான் தேர்ந்தெருத்த ஒரு சூத்திரமும் அது சார்ந்ததுதான்.
"நமக்கு நாமே ஒளி, நமக்குள் நம்மாட்சியே, பிரபஞ்சத்தில் நாமொரு இம்மி, நமக்கான மீட்சி நம்முள் நிறைவாயிருப்பதுவே"
நம்மிலிருந்து நேர்மறையாய் இருக்கத் தொடங்கினால், மென்மையான வாழ்வை நமக்கே அது திருப்பித் தரும். இப்பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு மிக மிக மிகச்சிறிய விசயமென்று யோசிக்கும் போது, அத்தனை எதிர்மறையும் அழிந்து அன்பை விதைக்க முடியுமென்று நிச்சயமாக நம்புகிறேன்! ❤

No comments:
Post a Comment