~
நீ அறியா நான்!
எனக்கு இப்படியே இருக்க வேண்டும் போலிருக்கிறது. எந்தவொரு தொந்தரவின் பெயரையும் பெற்று விடாமல் இப்படியே. எனக்கு உண்மையைத் தெரியாது. நீ விரும்பும், விரும்பித் தொலைக்கும், நினைத்துக் கொண்டே வாழும் அளவுக்கு நியாயவாதி நான் கிடையாது. என்னைப் பற்றி உனக்குத் தெரியாது. உனக்குப் புரியும் படி சொல்லப் போனால் நான் அக்மார்க் கேவலம்.
நீ தரும் காதலில் கால்வாசியைக் கூட எனக்குத் திரும்பத் தரத் தெரியாது. எனக்கும் எல்லாரையும் போல இதுவும் ஒருநாள் கடந்து போகும். இதுவரைக் கடந்து போன கொடூரங்களை விட சீக்கிரமாகக் கடந்து போக வேண்டும் இந்த தனிமை. கடந்து போனால் மீதமிருப்பது காலியிடமே.
ஒரு கணம் உன்னை விட்டு முழுதும் விலகி விட வேண்டும் என நினைக்கிறேன். அடுத்த கணமே உன்னை ஏதோவொன்று நியாபகப் படுத்துவதாய் உணர்கிறேன். நீ சொல்வதைப் போல் தொடக்கத்தில் நீ பார்த்ததிலிருந்து தலைகீழாக நான் மாறியிருக்கிறேன். நீ சொன்னப் பிறகுதான் எனக்கேத் தெரிகிறது.
என் கோபமெல்லாம் என் மீதுதான். கிட்டத்தட்ட திருந்தியிருக்கிறேன். இன்னும் நிறைய திருந்த வேண்டியிருக்கிறது. எனக்கென்று நீயிருக்க இங்கே என்னென்னவெல்லாம் எனக்கு இல்லாமல் போகுமோ, நீ இழக்க நேருமோ தெரியாது. என்னால் மேற்கொண்டு எதையும் இழக்க முடியாது. இதுவரை இழப்பைத் தவிற பெரிய இலாபமென்று எதையும் பெற்றதாய் நியாபகமில்லை.
இதுவரை நான் கேட்டு விட்ட வசை பாடல்களை விட இனிமையானவற்றை இனிமேல் கேட்க முடியாது. கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என் பொறுமை வெடித்து விட வெகு நேரமெடுக்காது. என்னால் உன்னிடம் "நான் வரமாட்டேன், உன் வாழ்க்கையைப் பார்" என்று சொல்ல முடியவில்லை. எந்த கணத்தில் என் குணம் மாறுமென்றுத் தெரியாது.
உனக்கோ உன்னைச் சார்ந்தவர்களுக்கோ அல்லது என்னைச் சார்ந்தவர்களுக்கேக் கூட நான் நியாயமானவனாக இருந்ததில்லை. ஊருக்கேத் தெரியும் நான் எந்தளவு உருப்படாதவன் என்று. நீ விலகிச் சென்ற காலத்தினிடையில் எத்தனையோ நாடகங்கள் அரங்கேறியது.
நான் கெஞ்சிக் கிடந்தக் காலம் மாறி இப்போது என் ஒற்றை வார்த்தைக்காக நீ காத்திருக்கும் அளவுக்கு உன் கோபமும், என் கர்வமும் தலைகீழாக மாறிப் போயிருக்கிறது. இன்று இந்த நிமிடம் நீ வேண்டுமென்று எழுதிக் கொண்டிருக்கிறேன். உனக்காக எழுதிக் கொண்டிருக்கிறேன்.
நேற்றைய முகத்திரை எப்படியோ என்பதைக் கடந்து இன்றைய முகத்தை மட்டும் உன்னால் ஏற்றுக் கொள்ள முடியுமா. காதலிக்க முடியுமா. இல்லை, வாழத்தான் முடியுமா. பக்குவமென்பது எல்லாவற்றையும் கடந்து வராது. அதன் பெயர் இறப்பு. நான் நாட்களை எண்ணி எண்ணிக் கொஞ்சம் சீக்கிரமாய் நகர்த்தத் துவங்கியிருப்பது அதனை நோக்கித்தான்.
நீ எந்தளவுக்கு இப்போது என்னை நேசிக்கிறாயோ, அதை விட நூறு மடங்கு அதிகமாக நான் நேசித்திருக்கிறேன் என்பது உனக்குத் தெரியும். என் நெருக்கமானவர்களுக்குத் தெரியும். அதே அளவு நீயென்னை வெறுத்திருக்கிறாய் என்றும் தெரியும். இங்கே எல்லாமே சமமாக நிகழாமல் நான் உன்னை வெறுக்காமல் இருப்பதுதான் தவறாகிக் கிடக்கிறது போல.
உன்னைத் துரத்தி விடும் அளவுக்கு எனக்கு நல்ல மனம் கிடையாது. அதே போல் நான் நேசித்த ஒரே காரணத்தால் சற்று தள்ளியே நிற்கிறேன் உன் உண்மையானப் பிரியத்திலிருந்து. எனக்கு நீ நிம்மதியாக இருக்க வேண்டும். அவ்வளவுதான். நான் உன்னை விட்டு எவ்வளவு தூரம் விலகியிருக்கிறேனோ, அந்த அளவு நீயும் என் சுற்றத்தாரைப் போல் நிம்மதியாய் இருப்பாய்.
என் மீது நீ வைத்திருக்கும் பிரியங்கள் கண்டிப்பாக அழுக்காகி விடக் கூடாது. எனக்கு எவ்வளவு காலம் வேண்டுமென்று எனக்குத் தெரியவில்லை. எனக்கென்று நான் நிலையாகி விட்டேன், நிலையாயிருப்பேன் என்று தெரியும் வரை நான் உன் மீதான பிரியத்தைக் காட்டிக் கொள்ளப் போவதில்லை.
நான் உனக்காக நிறைய எழுதிக் கொண்டிருக்கிறேன். எல்லாவற்றையும் உன்னிடம் ஒருநாள் தெரிய வைப்பேன். நீ என் பிரியத்திற்குரியவள், தேவதை, மகாராணி, காதலி, ஆதி. எனக்கென்று இருக்கும் ஒரேயொரு கடைசி நம்பிக்கை. விரும்பி வரும் உலகிலேயேப் பிடித்தவொரு விசயத்தை விட்டு விலகி நிற்கத் துவங்கும் போது என்னை நானே சமாதானப்படுத்திக் கொள்வதை விட என் மனப்பக்குவம் பெரிதாக வளரவில்லை.
என்னால் உன்னை விட்டு விலகி புலம்பாமல், அழாமல், சந்தோமாய் இருக்க முடியுமாயென்று தெரியாது. உன் உள்ளார்ந்த நேசத்தை இப்போது மட்டும் உபயோகித்துத் தூக்கி வீச நான் தயாராயில்லை. இப்படியே இரு. காலங்கள் மாறும், மனங்களும் மாறும். மீண்டும் நான் கெஞ்சிக் கேட்கும் நிலை வந்தால் தட்டிச் செல்லாமல் தந்து விடு.
இப்பொழுதும் சொல்கிறேன். நீ இந்தளவுக்குக் கொண்டாடும் அளவு நான் நல்லவனில்லை. உன் நிலைக்குக் கண்டிப்பாக உரியவனில்லை. உன் எதற்கும் நான் ஈடேயில்லை. உன் அருகாமைக்குக் கூட நான் அருகதை இல்லை. உன் நினைவில் இருக்கும் கேவலமான என்னை விட மகாக் கேவலமானவனாக நான் மாறி நாளாயிற்று. இப்போது அக்மார்க் அசுத்தமாகப் பேசிக் கொண்டிருக்கிறேன்.
தயவுசெய்துத் தப்பித்துக் கொள்.
தூய்மையான அழுக்கு நான்.!