Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Sunday, February 12, 2023

அணைத்துக்கொள்

 ~

உனக்கு என்னதான் வேண்டும்? 

என்று நீ கேட்டு முடிக்கையில் நான் காட்டும் நெஞ்சனைக்கும் பாவனைக்குப் புன்னகைக்கும் உன் முகம் சொல்கிறது என் பேரன்புக் காதலை.


நேசப்பட்டு மடிந்து கிடப்பது நான் மட்டுமே என்று நினைத்து வீழ்ந்துக் கிடக்கையில் நீயும் அதே மனநிலையில் இருப்பதைத் தெரிந்து கொண்டுப் புத்துணர்வடைவதில் தொடங்குகிறது என் சுயநலம்.


இதுவெல்லாம் காதலா? என்றால், இல்லைய? என்ற பதிலைத் தவிர அதனை விளக்குமளவுக்கு புத்திசாலியாக நானில்லாமல் இருப்பதே இது காதல்தான் என்பதற்கு ஓர் அத்தாட்சியாகத் தெரியவில்லையா.?


நான் என்ன உன்னைத் தலைக்கு மேல் தூக்கி வைத்து ஆடவோ, வெறுங்கையில் நின் பாதங்களை தாங்கவோவா போகிறேன்?

இல்லை, அற்ப மானிடர்களை விட சற்று குறைவாக சொற்ப காதலை உனக்குத் தந்திருப்பேன். அவ்வளவுதான்.


இதுவெல்லாம் வேண்டாம். காதலென்றாலே கசடு படிந்த கறையாய்த் தான் இருக்கும். நீ மட்டும் என்ன அதற்கு விதி விலக்கா? என்று கேட்டாயென்றால். இல்லை.! ஆனால், நீ விதிவிலக்கு தான். நீயெனும் போது உன்னில் நானும் விதிவிலக்குதானே?


உண்மையாய் தான் சொல்கிறாயா.? அவ்வளவெல்லாம் என்னை நேசிக்கும் அளவுக்கும் நான் என்ன செய்து விட்டேன் உனக்கு..?? 

கட்டியணைத்துக் கூறினேன்.

நேசிக்கச் செய்தாயல்லாவா..??

வேறென்ன வேண்டும்..!!


"நெஞ்சாங்கூட்டில் சாயும் போதும் நேர்மையுண்டு"


#Hug_Day ❣️




Wednesday, February 8, 2023

முன்மொழிவு தினம்

 ~

காதல், நமக்குள் அது தானே நிகழ்ந்தது. 'என் வாழ்வில் நீ வரவில்லை என்றால்' என்று உனக்கு புகழாரம் கூட என்னால் பாட முடியும். அவ்வளவு ஆச்சரியங்களை நடத்தியிருக்கிறாய் என்னுள். நான் கொட்டித் தீர்த்து விடுவேன். ஆனால், உனக்குதான் ஆணவக் கொம்பு முளைத்து விடும். பரவாயில்லை அதுவும் அழகாய்தான் இருக்கும்.


இங்கு சட்டென நிகழ்ந்த அதிசயம் போல் காதலை பாவிப்பதைப் பார்த்தால் எனக்கு குழப்பமாய்தான் இருக்கிறது. பார்த்ததும், தொட்டதும் காதல் உருவாகிடுமென்று எனக்கு நம்பிக்கையில்லை. ஒருவேளை அது எல்லோரையும் போல் என் மனநிலைக்கு பொருந்தவில்லை போல.


காதல் படிப்படியாக நாம் வளர்வதை உணர்த்தக் கூடியது. நம்முள் இருக்கும் அன்பும், அக்கறையும் வளர்வதை உணர்த்திக் கொண்டேயிருக்கும். புரிந்து கொள்ளச் செய்யும். ஆரம்பத்தில் இருப்பதை விட இறுதியில் காதல் அதிகமாகிதான் இருக்கும். புரிதலுக்கான இடைவெளியும், வெளிப்படைத் தன்மையும் எளிமையாக பகிரப்பட்டிருக்கும். அது உள்ளார்ந்த உணர்வுகளில் ஊடாடிட உதவவும் செய்யும்.


ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பின் அப்பாவும், அம்மாவும் தன் அன்பை சொல்லிக் கொள்ளவே மாட்டார்கள் என்று கேள்விப் பட்டிருக்கிறேன். அந்த அன்பு பழக்கப்பட்டிருக்கும். இருவர் சார்ந்த நன்மையோ, தீமையோ இது இப்படி இருந்தால் இதுதான் தீர்வென்று ஓரளவு புரிந்து கொள்ளும் நிலையில் அதை வெளிப்படுத்த தயக்கம் கொள்வார்கள். ஆனால், அப்போதும் நான் உன்னிடம் என் காதலைச் சொல்ல தயங்க மாட்டேன்.


இப்போது நம்மிடம் வந்துவிட்டேன். உனக்கு ஓரளவு என்னைத் தெரியும், எனக்கும் உன்னை அப்படித்தான். நான் முதல்முறை உன்னிடம் காதல் சொன்ன போது சிரித்த நீ, இன்றைய நீ இல்லை. முதல்முறை உன்னிடம் அழுத நானும், இன்றைய நான் இல்லை. நாளை நாம் இதேபோல இருக்கப் போவதுமில்லை.


ஒரு உறுதிப்படுத்தலுக்காக எச்சரிக்கிறேன். வாழ்க்கை மாறும். நிறைய மேடு பள்ளங்களை நாம் கடக்க வேண்டியிருக்கும். நான் உன்னையும், நீ என்னையும் தாங்கிப் பிடித்து நடக்கும் நிலை உருவாகும். தூக்கிச் செல்லும் நிலை கூட வரலாம். எனக்கு என் எல்லா பயணத்திலும் நீ இருக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.


உனக்கு என்னை எவ்வளவு பிடிக்குமென்று தெரியவில்லை. ஆனால், எனக்கு உன்னளவு யாரையும் பிடித்ததில்லை. நீ என் எல்லாவற்றிற்கும் ஆதி. காதலுக்கு நிறைய காதல் காதலே!


#ProposalDay ♥



ரோஜா தினம்

 ~

ஒரு நாளில் வாடிவிடும் ரோஜாவைப் போய், எதற்கு வாழ்நாள் காதலுக்கு தருகிறார்கள் என்பதுதான் குழப்பமாய் இருந்தது. ரோஜா பற்றிய ஒரு கட்டுரையில் ரோஜா காதலுக்கு மட்டுமே பரிசளிக்கப்படவில்லை என்றும், அது அன்பிற்கு உகந்த அனைத்து மனிதர்களுக்கும் மலரின் நிறவாரியாக பிரித்து பரிசளித்து இந்நாளை கொண்டாடலாம் என்றும் படித்தேன்.


கருப்பு நிறத்தில் ரோஜா இருக்கிறதென்று கூட இன்றுதான் தெரிந்து கொண்டேன். காதலர் தினத்தில் அவரவர் ஆடைகளின் நிறத்தை வைத்து காதல் செய்பவர், காதல் இல்லாதவர், காதல் பிடிக்காதவர் என்று பிரித்தறியலாம் என்று நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.


அதே போலதான் இந்த ரோஜா தினமும் உருவாகியிருக்கும் என்று நினைக்கிறேன். காதலர் தினத்தில் புதிதாக காதலி அமைந்ததாக யாரும் சொல்லி கேள்விப்பட்டதில்லை. அது முந்தைய ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் இருந்திருக்கலாம். இப்போதெல்லாம் நெருக்கம் மிக எளிதாகிவிட்டது.


குறுஞ்செய்திகளில் அனுப்பி விடும் காதல் குறியீடுகளுக்கு இடையில் நேரில் சந்திக்கும் வரை கூட காத்திருக்காத சொல்லப்பட வேண்டிய காதல், காதலர் தினத்திற்காக காத்திருக்கும் என்று நினைப்பது அபத்தம். இது ஒரு விதத்தில் 'அதெப்படி' என்பதாக விணவக் கூடிதாக இருந்தாலும் கூட நன்மையானதுதான்.


காலத்திற்கு தகுந்தாற்போல் காதல் பரிமாற்றம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அது இருக்கட்டும். இந்த ரோஜா தினம் வெறுமனே காதலர்களுக்கு மட்டுமே உரியதல்ல என்பதாக படித்த பின் ஏதோவொரு அன்பு நமக்காக ஒரு ரோஜா ஏந்திக் கொண்டிருக்கும் எல்லோரும் நம்பலாமென்று சொல்லிக் கொள்கிறேன்.


காதல் நிகழ்த்தும் அதிசயங்களில் அத்தனை அன்பையும் ஒன்றாக்கி அழகாக்குவதையும் சேர்த்துக் கொள்ளலாம். ரோஜா கொடுத்து காதல் கொண்டாடுவதின் மூலமாகவாவது ஒரு சந்திப்பு நிகழ்ந்து விடாதா என்று ஏங்கும் காதலுக்கு, ஒருநாள் அது விரும்பிய பூந்தோட்டமே தனதாகும் என்று தெரியாமலே இருக்கலாம்.


ரோஜா தினம் ❣️




Wednesday, February 1, 2023

அயலி (2023)

 ~

அயலி : 2023


படிப்பு எவ்ளோ அத்தியாவசியம். ஒரு காலத்துல ஒவ்வொரு பொண்ணுக்கும் அந்த படிப்பு மேல எவ்ளோ ஏக்கம் இருந்திருக்கும். இதையெல்லாம் தாண்டியும் என்னென்ன முட்டாள்த்தனங்கள அடிப்படையா வச்சி ஆண்கள் அடக்குமுறைய கையாள முடிஞ்சதுன்னு நிறைய முற்போக்கு விசயங்கள தெளிவா பேசிருக்கக்கூடிய படம்தான் அயலி.


ஒவ்வொரு கதாப்பாத்திர வடிவமைப்பும் ரொம்பவே அழகா நேர்த்தியா இருந்தது. எல்லா கதாப்பாத்திரத்துக்கும் முழு இடத்த குடுத்துருக்காங்க. நிறைய வசனங்கள் தியேட்டர்ல வந்திருந்தா விசில் பறந்திருக்கும். எனக்கு ரொம்ப புடிச்சிருந்த கதாப்பாத்திரங்கல்ல அந்த டீச்சர், தமிழ்ச்செல்வி அம்மாவோட சேர்த்து அந்த சேகர் கதாப்பாத்திரத்தையும் சொல்லலாம். 


இந்த சேகர் மாதிரி யாராவது ஒருத்தரையாவது கண்டிப்பா நம்ம ஊர்கள்ல பாக்க முடியும். ரொம்ப சாதாரணமா பெரிய விசயங்கள கையாளுற ஒரு கதாப்பாத்திரம். லெஃப்ட் ஹேண்ட்ல டீல் பண்றதுன்னு சொல்லுவாங்கல்ல, அப்டி. ரொம்ப அழகாவே நடிச்சிருந்தாரு. 'நாங்க சேலைய சுத்திக்கவா'ன்னு ஒரு ஆம்பள கேக்கும் போது 'எல்லாமே இடைல வந்ததுதான, உனக்கு வேணும்ன்னா எதையாச்சும் சுத்திக்கோ. இல்லைன்னா அம்மணமா திரி'ன்னு சொன்னது ரொம்ப சாதாரணமா பெரிய விசயத்த பேசினது போல இருந்துச்சு. நல்லாருந்துச்சு.


ஒரு சின்ன பொண்ணு கல்விக்காக, பெண்ணுரிமைக்காக, பெண்கள் மீதான அடக்குமுறைக்கு எதிராக, ஊரோட பிற்போக்குத் தனங்களுக்கு எதிராக உருவாக்குற மாற்றமும், அது எவ்ளோ பெரிய விளைவ தருதுங்குறதையும் நேர்த்தியா சொன்ன படம். நாளு மணி நேர திரைக்கதையும், கதையில இருந்து விலகாம அப்படியே பயணப்பட வைத்தது ரொம்ப சிறப்பான விசயமும் கூட.


இதெல்லாம் நிஜமாவே இருக்கான்னு நினைக்கிற சில மூடத்தனங்களையும், இப்டிதான அவங்களுக்கும் நடந்துச்சுன்னு சொல்லக் கூடிய நிறைய பாதிப்புகளையும் பேசியிருக்காங்க. ஜாதி, மதம் போல கௌரவம், மானம், மரியாதை, கலாச்சாரம்ன்னு காரணம் காட்டி இன்னும் நிறைய ஒடுக்குமுறைகள் நடந்துட்டுதான் இருக்கு.


'இங்க நாம சொல்லாம எதுவும் தெரியாது'ன்னு சொல்ற காட்சில இருந்து ஒரு விசயம் புரிஞ்சது. பெண்ணுக்கு எதிரான எந்தவொரு அடக்குமுறையும் ஒரு பெண்ணோட துணையில்லாம அரங்கேற்றவே முடியாது. கண்டிப்பா ஒரு ஆண் கூட்டத்தால மட்டும் பெண்களை அடிமைப்படுத்திற முடியாது. அடிமைப்படுத்துறதுக்கும், அடக்குமுறைக்கும் கூட ஒரு ஆணுக்கு இன்னொரு பெண்ணோட அமைதி தேவைப்படுது.


அதுக்கு தெரிஞ்சோ, தெரியாமலோ, அறியாமையினால அதுக்கு உடந்தையா இருக்க வேண்டிய கட்டாயத்த குடும்ப அமைப்பு பெண்ணுக்கு உருவாக்கி தந்திருக்கு. 'அயலி'யுடைய அடிப்படை கருத்தாவே அதைதான் பாக்குறேன். மாற்றம்ங்குறது தனக்குள்ள இருந்து முதல்ல துவங்கனும். அப்பதான் அது விசாலமாகி நம்ம உதாரணமாகி எல்லாரையும் மீட்கலாம்.


எனக்கு தெரிஞ்ச ஒரு விசயம். ஜாதி, மதத்த மாதிரியான மிகப்பெரிய அடக்குமுறை குடுப்பத்துக்குள்ள, நிறைய வீடுகள்ல சத்தமே இல்லாம நடந்துட்டிருக்கு. வெளியவே தெரியாம எத்தனையோ குழந்தைகள் பாதியிலயே படிப்புல இருந்து நிப்பாட்டப்படுறாங்க. திருமணம் செஞ்சி வைக்கப்படுறாங்க.


ஏதோவொரு தேவையில்லாத காரணத்துக்காக, ஆண்களின் தனிப்பட்ட பிரச்சனைக்காக பெண்கள் மீதான வன்முறை ரொம்ப பகிரங்கமாவும் கூட சில இடங்கள்ல நடக்குது. அத சமூகமும், குடும்ப அமைப்பும் ஆதரிக்கிதுங்குறது இன்னும் வருத்தமான விசயம். இது எல்லாத்தையும் தாண்டி 'ஆம்பள அப்டிதான் இருப்பான்'ங்குற ஒரு பிற்போக்கு உந்துதல அடுத்த தலைமுறை இளைஞர்களுக்கும் கொண்டு போய் சேர்த்துட்டு தான் இருக்காங்க. 


வெறுமனே கௌரவம், கலாச்சாரம், மானம்-ன்னு சொல்லி அறிவுரை சொல்லக் கூடிய எத்தனையோ ஆண்கள் குடிச்சிட்டு தெருவுல கிடக்குறத பாத்திருப்போம். அந்த மானமெல்லாம் ஏன் அவங்களுக்கு இல்ல? ஒரு வன்புணர்வு செய்த ஆணுக்கு கிடைக்கிற சமூக இடமும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு கிடைக்கிற சமூக இடையூறுக்கும் இடையில ஏன் இவ்வளவு ஏற்றத்தாழ்வு?


ஒட்டுமொத்த வாழ்க்கையையும் ஆண்களுக்காகவே பெண்கள் அர்ப்பணிச்சி வாழ்ந்துட்டு போயிறனும்ங்குற கீழ்த்தரமான மனநிலையில இன்னமும் எத்தனையோ பேர் இருக்கதான் செய்றாங்க. இது முன்னாடி மாதிரி இல்லாம இப்போ கொஞ்சம் கொஞ்சமா மாறிட்டு இருக்குல. இதே மாதிரி இன்னும் மாறும்.


இந்த எல்லா பிற்போக்கு நிலையும் இப்போ குறைஞ்சிருக்குன்னா, படிப்புரிமை எல்லாருக்கும் உரியதுன்னு ஆகிருக்குன்னா, அடக்குமுறைக்கு எதிரா சின்னச் சின்ன குரலாவது ஒலிக்குதுன்னா, ஒவ்வொரு பிற்போக்கு கிராமத்துலயும் ஏதோவொரு பெண் முதன் முதலா இது எல்லாத்தையும் எதிர்த்து கேள்வி கேட்டிருப்பாங்கல்ல. அவங்கதான் அந்த 'தமிழ்செல்வி'.


"உங்க அறிவுக்கு எது சரின்னு படுதோ, அத செய்ங்க!"


அயலி - ஒரு தீப்பொறி ❤







ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...