~
மழைக்கால சாலையோரத்தில் ஒருத்தி அவசர அவசரமாய் ஓடி வந்த இளைனின் தலையை துப்பட்டாவால் துடைத்து விட்டதை பார்த்துக் கொண்டிருந்தேன்.
அடிக்கடி சாப்பிடும் அசைவ உணவகத்தில் புரோட்டா சாப்பிடும் கலையை தன்னோடு வந்திருந்த பெண்ணுக்கு ஒருவன் சொல்லி கொடுத்து கொண்டிருந்தான்.
மாறி மாறி என் இரு நண்பர்கள் அவரவரின் கைகளை முகப்பு படமாக வைத்து தங்களின் காதலை பகிரங்கப்படுத்திக் கொண்டனர்.
தெருவிளக்கு வெளிச்சத்தில் கைப்பிடித்து நின்று கொண்டிருந்த இருவர் சட்டென முத்தமிட்டுக் கொண்டனர்.
அவன் தேநீரை ஆற்றிக் கொடுக்க, இவள் அவன் உதட்டுக்கு கீழ் ஒட்டியிருந்த சிறு துண்டு பிரட்டை விரல்கள் எடுத்து விட்டாள்.
சென்ற வாரம் நான் சென்ற திருமண விழாவில் மணமக்கள் இரத்ததானம் செய்ததையும், அதற்கென்று முகாம் அமைத்திருந்ததையும் பார்த்த போது மகிழ்ச்சியாய் இருந்தது.
நெருங்கிய நண்பனின் கல்யாணத்திற்கு பிறகான விருந்தால், அவன் உடற்கட்டை இழந்து தொப்பையானதை நகையாடி அவன் மனைவி பேசிக் கொண்டிருந்தாள்.
எனது இருக்கைக்கு மூன்று இருக்கைகளுக்கு முன்னிருந்த கணவன் மனைவி ஏதோ முனுமுனுத்தபடி கொஞ்சிக் கொண்டிருப்பதை அவர்களின் மகள் தடுத்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
எதார்த்தமாய் அலைபேசியை எடுத்துப் பார்த்தால், இருபதாமாண்டு திருமண நாளென்று ஒரு அக்கா வாட்சப்பில் பதிவிட்டிருக்கிறார்.
எதிர்வீட்டு ஓய்வு பெற்ற இராணுவ அதிகாரி வயதான மனைவியோடு மொட்டை மாடியில் வாக்கிங் போய்க் கொண்டிருந்தார்.
உன் மரணத்திற்கு முன்னேமே நான் சாக வேண்டுமென்று பாட்டியிடம் சொல்லி விட்டு, அதே போல் இறந்தும் போன வாட்ச்மேன் தாத்தா நினைவுக்கு வந்தார்.
உன்னை தேடுவதற்கு எனக்கு காரணங்கள் தேவையில்லை. நீ என் இன்றைய வாழ்தலுக்கான காரணம். நாளைய வாழ்க்கைக்கான ஆசை.
அது ஆஹா, ஓஹோ என்றெல்லாம் அல்ல.
என் அருகில் இருந்த காதல்களைப் போல! ❤

No comments:
Post a Comment