Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Wednesday, January 14, 2026

நீயென் நிலம்!


~
எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமென்று நான் சொன்ன, செய்த ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து எனக்கும் படிப்பினையாக்கி நிரூபிக்கிறாய். உனக்கிது நியாயமற்று தெரியவில்லையா என்பதுதான் என் முதல் கேள்வி. இருந்தும் அதை விடுத்து இன்னொன்றை கேட்க விழைகிறேன்.

உன்னை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் என்னை நிறுத்திய உனக்கென்ன உரிமை இருக்கிறது என் மறைமுகப் பிரியங்களை கேள்வி கேட்பதற்கு. உன்னை என்னோடிருக்கச் சொல்லி எப்போதும் நான் வேண்டியதே இல்லையே.

நான் உன் இன்மையில் பிரியங்கொண்டாடிக் கிடந்தவன். எனக்கு நீ இல்லாதிருத்தலிலும் உன் நிலையை உணர்ந்து, வாழ்ந்து, வீழ்ந்து, மீள முடியும். அன்றி நீ இல்லாத வாழ்வென்பது என் சாபமென்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை.

நீ இல்லை என்பது ஒரு எலும்பு போர்த்திய சதைப் பிண்டமும், அதைச் சுற்றிய உடையும், பிரகாசமான ஒளியும், இல்லை என்பதேயாகும். உண்மையில் அப்படியான சூழலில் நீயெனக்கு இல்லாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி நான் உன்னை அணுகியதே இல்லை.

நீ இல்லாத நிலை வருமென்றால் அப்போது வெங்காயம் வெட்டாமல் அழுது கொண்டிருப்பேன், தலைக்கோத என் கையையே நாடுவேன், தலையணையை அணைத்துக் கொள்வேன், இறுதியாக நியாபகத் தீயில் என்னைச் சுட்டு வீழ்த்தி மறையச் செய்வேன்.

இப்படி நீ என்னோடு இல்லாதிருக்க இத்தனை வழி இருந்தும், இருக்க விழையும் உன்னைத்தான் இருக்க வேண்டாமென்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இல்லாமல் போயெல்லாம் உன்னால் என்னை வருத்த முடியாது. நீ இருந்துதான் ஆக வேண்டுமென்பதற்கு நீ இந்த என் ராணியல்ல, நிலம்!

❣️

No comments:

Post a Comment

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...