~
மென்மை | மேன்மை
எனக்கு தெரிந்தவர்களில் அதிகம் கோபப்படக்கூடியவர் என் தந்தை. ஆனால், அவர் அடிக்கடி "கோபத்தில் எழுபவன், நஷ்டத்தில் வீழ்வான்" என்று சொல்வார். நானும் இதை அடிக்கடி பயன்படுத்துவேன். இப்படி நமக்கு நாமே சொல்லிக் கொள்வதில் கூட ஒரு நிறைவு இருக்கிறது. இப்படி சொல்வதால் நம்மால் நம் தவறை சரி செய்து கொள்ள முடிகிறது. சரிவர அதன் விகித அளவுகளைக் கண்காணிக்க முடிகிறது. நம்மை நாமே திருத்த முடிகிறது.
எனக்குத் தெரிந்தவரை மிகவும் எளிமையான அதே நேரம் வீரியமான வார்த்தைகள் என்றால் மன்னிப்பும், நன்றியும்தான். நான் தயங்காமல் பயன்படுத்தும் வார்த்தைகளில் முக்கியமானவை இவை இரண்டும்தான். சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதையே குற்றச்சாட்டாக சொல்லும் அளவுக்கு பயனற்ற முறையில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். "நன்றி" என்று தமிழில் சொல்லும் போது சிலர் வித்தியாசமாக பார்ப்பதும் உண்டு.
இன்றைய சூழ்நிலையில் வீடு தொடங்கி உலகம் வரை கடுமையான வக்கிரங்களும், வன்முறையும் நிறைந்திருக்கிறது. இதற்கிடையிலும் பொறுமையைத் தாண்டி கோபத்தை மிகப்பெரிய பலமாகவும், பக்குவத்தைத் தாண்டி கட்டுப்பாடற்ற செயல்முறைகளை வீரமாகவும் பழக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது இந்த சமூகம். சமூக வளைதளம், சினிமாவில் இருந்து தெருவோரத் திண்ணை வரை மெல்லிய வன்முறைகள் பூசிய உரையாடல்களை சந்திக்காமல் நகர முடிவதில்லை.
பொறுமையாளர்களாக பார்த்த நிறைய பேர் கடும் கோபக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். பக்குவமான, தெளிவான நிறைய பேர் குழப்பங்களில் சிக்கி பதட்டமடைகிறார்கள். பதட்டத்தில் தவறுகளை செய்து அதன்பின் தனக்குள்ளேயே பலவீனமானவர்களாக உணர்ந்து விடுகிறார்கள். பலவீனங்களை மறைக்க பிறரையும் மன்னிக்காமல், தன்னையும் மன்னிக்காமல் குழப்பமான தனக்கு பழக்கமில்லாத வன்மங்களை சுமந்து திரிகிறார்கள்.
பணம், தொழில், குடும்பம், சமூக அழுத்தம், தனிமனித உளவியல் சிக்கல் என்று பல்வேறு காரணிகளால் நாம் நாளுக்குநாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சமூகத்தின் சமநிலையில் இந்த மாற்றத்தின் சராசரி விகிதம் வெகுவாக மாறுபட்டுள்ளதை சமீபமாகத்தான் கவனிக்க முடிகிறது. அந்தந்த வயதை தாண்டிய தவறுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. தடுக்க முடியாத அளவுக்கு அல்லது கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது.
ஒவ்வொரு மனிதனுக்குமான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் இடத்தில் சகமனிதர் யாரும் இல்லை. அதிகமான மனிதர்கள் எவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலும் கூட தனிமையாகவே தன் விசயங்களை கையாள விரும்புகிறார்கள். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தனித்தனி பிரச்சனைகளின் எல்லையில் தன் இயல்பைத் தாண்டி யோசிக்காமல் இருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. எதிர்மறையான நிறைய விசயங்கள் இயல்பைத் தாண்டி நடப்பவையே. அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.
சமூகத்தில் நெருடலாக இருக்கக் கூடிய விசயங்களைக் கூட, சுட்டிக் காட்டக் கூடிய இடத்தில் நாம் இல்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்தவரை கடினமான வழிகளை, மேம்போக்கான வன்முறையைக் கூட கையில் ஏந்தாமல் மென்மையாக நடந்து கொள்ள முயல்வதே மாற்றத்திற்கான ஆரம்ப வழி. நேர்மறை என்பதன் தொடக்கமே எதிர்மறையாய் இல்லாமல் இருப்பதுதான்.
வன்முறை என்றவுடன் உடல்ரீதியாக பிறருக்கு செய்யக்கூடிய தீங்கு மட்டும்தான் என்று பொருளல்ல. எதிர்மறை எண்ணங்களால், தவறான சிந்தனைகளால், காரணமற்ற பதட்டங்களால் கூட மெல்லிய வன்முறைகள் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு இடையில்தான் கெட்டப் பழக்கங்கள் மனிதர்களை ஆட்கொற்கிறது. இத்தகைய மெல்லிய வன்முறைகள் தனக்குள்ளே தன்னை அழித்துக் கொள்ளக் கூடிய ஆபத்தான விசயமும் கூட. ஒவ்வொரு விளைவின் முந்தைய வினையும் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று நம்புபவன் நான்.
காலத்திற்கு ஏற்றார்போல ஒவ்வொரு மனிதரும் தன் பொறுப்பில் நிதானித்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். மென்மையாக இருப்பதால், பொறுமையாக இருப்பதால் சின்னஞ்சிறிய மாற்றங்களை நமக்குள்ளேயே பார்க்க முடியும். அந்த மாற்றத்தின் மூலம் தன்னை வெறுத்த நிறைய பேர்களால் தன்னையே நேசித்துக் கொள்ள முடியும். தன்னை நேசிக்கத் தொடங்குபவன் எதிர்மறையின் பக்கம் விலக மாட்டான். அதுதான் மேன்மையாளர்களாக வாழ்வதற்கான, நேர்மறையான மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரே வழி என்று நம்புகிறேன்.
மென்மையாய் வாழ்! ❣️

No comments:
Post a Comment