~
என்னால் அதிகம் நேசிக்கப்படக் கூடியவர்களைப் பார்த்தால் இயங்கிக் கொண்டே இருப்பவர்களாக இருப்பார்கள். யாருக்காகவாவது, எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். அது வெளியில் தெரிந்தோ, தெரியாமலோ இருக்கலாம். ஆனால், இயங்கிக் கொண்டே இருப்பவர்கள் எப்போதும் எனக்கு சலிப்பைத் தருவதில்லை.
நான் கவனித்த வரையில் அவர்களின் நம்பிக்கை தன்னால் முடிந்த தொடர்ச்சியை நீட்டிக்கச் செய்வது. ஒரு அன்பின் தொடர்ச்சியை முடிவுக்கு கொண்டு வர விடாமல் நீட்டித்துக் கொண்டே இருப்பது. அவர்களிடமிருந்து நான் கற்றுக் கொள்ள நிறைய இருக்கிறது. அதில் மிக முக்கியமானதான நான் நினைப்பது நகர்வுதான். நேர்மறையின் பக்கம், நியாயத்தை நோக்கி ஒரு சிறு நகர்வையாவது வாழ்வில் நிகழ்த்திக் கொண்டே இருக்க வேண்டும்.
நாம் ஒன்றும் செய்துவிடாத எத்தனையோ பேர் நம்மை ஏந்தியிருப்பார்கள்.
நிறைய செய்தவர்கள் துச்சமாக்கியும் இருப்பார்கள்.
யார் என்ன செய்தாலும், செய்ய மறந்தாலும் மிக முக்கியம் "செயல்".
எனக்குத் தெரிந்தவரை ஒருவரின் உடனிருத்தலை விட மிகச் சுலபமான உதவி வேறொன்றுமில்லை.
கைக்கு எட்டிய அத்தனை பேருக்கும் ஏதோவொரு விதத்தில் நாம் பொறுப்புக்குரியவர்கள்!

No comments:
Post a Comment