நல்லவேளை...
நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை.
புரிந்திருந்தால் என்னைத் திருத்தி விடலாமென்று நினைத்திருக்க மாட்டீர்கள். நான் திருந்த வேண்டும் என்று எதிர்ப்பார்த்திருக்க மாட்டீர்கள்.
சர்வ நிச்சயமாக நான் திருந்தவே மாட்டேனென்று முடிவெடுத்திருப்பீர்கள். அவன் ஏன் திருந்த வேண்டும் என்று எனக்காக கேள்வி கேட்டிருப்பீர்கள்.
திருந்தும் அளவுக்கு நான் கசடாகவில்லை என்று புரிந்து கொண்டிருப்பீர்கள். திருத்தும் அளவுக்கு நீங்கள் வெளுக்கவில்லை என்றும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.
நான் அயோக்கியன் என்று தெரிந்தும் என் மீதான நம்பிக்கையை வலிமை குறையாமல் வைத்திருக்க முயல மாட்டீர்கள்.
நான் யோக்கியன் என்று தோன்றினாலும் உங்கள் மீதான அபிப்ராயங்களை என்னிடம் கொட்டித் தீர்க்க விரும்பவே மாட்டீர்கள்.
விருப்பு வெறுப்புகளைத் தாண்டி எனக்கென்று தனி ஆசைகள் இருக்குமென்று தெரிந்து கொள்ளாமலே நான் சுயநலவாதியென்று முடி சூட்டியிருக்க மாட்டீர்கள்.
ஏதொவொரு கட்டாயத்தில் இப்போதைக்கு நான் நின்று கொண்டிருக்கும் பாதை நிர்கதியாக இருந்தாலும், என்னைப் பொருத்தவரை இது நல்லவேளைதான்.
ஏனென்றால், நல்லவேளை.
நீங்கள் என்னைப் புரிந்து கொள்ளவில்லை. புரிந்திருந்தால், நீங்களும் காதலித்திருப்பீர்கள்!


No comments:
Post a Comment