~
விவரம் தெரிந்ததில் இருந்து ஓடிக் கொண்டிருக்கிறேன். எனக்கு உழைப்பு கிட்டத்தட்ட பழக்கமான ஒன்று. பணம் என்பது சேமிக்க அல்லது செலவழிக்க. அவ்வளவுதான். அந்த பணத்தைத் தாண்டி வேறில்லை என்பவர்கள் மேல் எனக்கு துளி மரியாதை கூட கிடையாது.
அதற்காக பணத்தின் மேல் பிரியம் இல்லை என்று யாரும் சொல்லி விட முடியாது. கண்டிப்பாக பணம் தேவை. அத்தியாவசியம். ஆனால், இதனைத் தாண்டி அதைக் கொண்டாட வேறெந்த காரணமுமில்லை. நான் நிச்சயமாக பணம் நிம்மதி தராது என்று சொல்ல மாட்டேன்.
பணமும் ஓர் தைரியம். எனக்குத் தெரியும் "Money is Not A Happiness" என்பதெல்லாம் முட்டாள்தனமான வாக்கியம்தான். அதை வைத்து மட்டுமே எல்லாமும் சாத்தியமென்று அதைக் கொண்டாடுவதுதான் கேவலம். பணம் இருக்கிறது என்பதற்காக ஒரு அயோக்கியனை உயர்த்திப் பேசவோ, பணம் இல்லை என்பதற்காக தப்பே செய்யாதவனை அடிக்கவோ எனக்கு மனமொப்பாது.
எல்லா நடுத்தர குடும்பத்து இளைஞனுக்கும் ஆசைகள் இருக்கும். வெறுமனே எல்லாவற்றையும் மூடி மறைத்து வாழ்ந்து விட்டு போகிற அளவுக்கு முட்டாளாய் இருக்க அவசியமில்லை. உனக்கென்ன தேவையோ, பிரியமோ அதைக் கொஞ்சமாவது செய். முயற்சித்த மனநிறைவாவது இருக்கும்.
என்னைப் பொருத்தவரை கௌரவம், அந்தஸ்து பார்ப்பது என்பது ஜாதி மத பாகுபாட்டை விட மிகக் கேவலமான விசயம். என்னால் செய்ய முடிவதை யார் உதவியும் இல்லாமல் நீ செய்து விட்டாய் என்றால் மட்டுமே நீ அதில் பெரியவன். அன்றி பணம் அந்த தகுதியை உனக்குத் தந்து விடாது.
எல்லோரிடமும் பணம் வரும். சிலரை பணம் கொண்டாடும். சிலர் பணத்தைக் கொண்டாடுவார்கள். அவரவர் விருப்பம் அது. ஆனால், உங்களின் கஞ்சி போட்ட சட்டைகளின் நடுவே கடந்து போகும் ஓர் அழுக்குச் சட்டையின் உழைப்பை மட்டும் எள்ளி நகையாடாதீர்கள். அது அநியாயம்
கடைசியாக ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். வெறுமனே பணத்தை வைத்து ஒரு மயிரும் புடுங்க முடியாது!


No comments:
Post a Comment