Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Sunday, August 31, 2025

வாழ் நீ!


~
உனக்கும் எனக்கும் என்ன இருக்கிறது. நான் வியக்க, ரசிக்க, மகிழ, நீ தந்தது எது. அன்பென்கிறாயா? இல்லை. இருப்பென்கிறாயா? இல்லை. வேறென்ன..

நீயறிந்த, அறியாத எத்தனையோ பேரதிசயங்கள் இங்கு நிகழ்ந்திருக்கும். நீ இந்த கருமை நிற நோட்டுப் புத்தகத்தில் வெண் மையினால் தீட்டப்பட்ட கவிதை. நீ அப்படித்தான் என்னுள் நிகழ்ந்தாய். உனக்கும் எனக்கும் ஒரே வீடு, ஒரே மழை, ஒரே குடை, ஒரே அன்பு.

நான் உலறிக் கொண்டிருக்கும் மிக நீண்ட புலம்பல் நீ. நான் அயர்ச்சியில் புன்னகைக்க நினைவில் ஓடும் முகம் நீ. நான் கடந்தே விடாத சிற்றோடை நீ. நான் அருந்தாத மது நீ. எனக்குப் பிடித்திருந்தும் கேட்காத பாடல் நீ.

உனக்கென்ன தெரியும். ஒரு திண்ணையில், உலகின் ஏதோவொரு மூலையில், சக மனிதர்கள் கண்ணில் படாத தொலைவில், கொசுக்கடியில் ஒருவனால் யோசிக்காமல் உனக்காக எதையாவது எழுதி விட முடியுமென்றால் அதை என்ன சொல்லி அழைப்பாயோ அதுவாகவே உன் வாழ்வில் நான் இருந்து கொள்கிறேன்.

நானென்ற இருளில் நீ சிறு திரியின் ஒளியாய் இருக்கிறாய். வாழ் நீ. என் பிரியத்தில், என் வழியில், என் மகிழ்வில், என்னுள். 

வாழ் நீ! 🤍

நினைவாய்!


~
நான் நினைக்காமல் இருக்க நினைக்கும் நினைவுகள் உன்னுடையது. அதில் மிகச்சிறிய பாகங்களை அவ்வப்போது உதறி விட்டிருப்பேன். நீ சுமந்து கொண்டிப்பதாக, அதன் எடை உன் தோள்களை பாரமாக்குவதாக நினைத்துக் கொண்டிருக்கும் ஒவ்வொன்றும் என் நினைவுகளின் துகள்களே. அவ்வப்போதைய உன் கண்ணீருக்கு காரணம் அதன் தூசு.

உனக்கென்ற காதலின் பாரத்தை நான் மிகையாக்காமல் விட்டிருக்கலாம். அது என் பழக்கம். எனக்கு மெனக்கெடச் செய்ய பிடிக்காது. நான் தந்து விட்டதென்னவோ கூடடைத்த கிளிக்கு கொடுக்கும் கொய்யாத் துண்டு போலத்தான். உனக்கது பெரியது. ஆனால், என் தோப்பெல்லாம் உன் பெயர்தான் ஒலிக்குமென்று நான் சொன்னால் உனக்கெப்படி தெரியும்.

உனக்கென்ன.. மீதமிருக்கும் நன்னாட்களில் ஒரு வாழ்த்துச் செய்தியாக நீ இருக்க விழைகிறாய். நான் உன் வாழ்வின் வாழ்த்தாக சொல்வதே இப்பிரிவைத் தான். இதற்குப் பின் நீ என் சார்ந்த எதையும் சுமக்க வேண்டிய அவசியமே இருக்காது. என்ன ஒரேயொரு வருத்தம் "உனக்கு இன்னும் கொஞ்சம் நான் காதலைக் காட்டியிருக்கலாம்"

வாழ் நீ! ❣️

Thursday, August 28, 2025

நிலம்


~
குடும்ப அமைப்பின் மீதான விமர்சனங்கள் நாளுக்கு நாள் எனக்குள் அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. குடும்பத்தின் மீதான பொறுப்பின்மை, சுயநலம் இன்னும் இதைத் தாண்டிய தயங்கச் செய்யும் பல்வேறு குற்றச்சாட்டுகளோடு பயணித்துக் கொண்டிருக்கிறோம்.

ஒரு குழந்தையின் மீதான சரியான பொறுப்பை, கடமையை நிறைவேற்றாத தாய், தந்தை. அதில் துளியும் வருத்தமடையாத ஒரு குணம். அதனை வற்புறுத்தாத உறவினர்கள். ஏளனமாக கையாளப்படும் மனிதாபிமானமற்ற செயல்களென்று எக்கச்சக்க சிக்கல்கள்.

அத்தியாவசியமான தாய், தந்தை அவர்களைச் சார்ந்த மனிதர்களோடு ஆரோக்கியமான ஒரு வாழ்வியல் அமையப் பெறுவது வரம். சமூகத்தில் ஒவ்வொரு குடும்பத்தின் கடைசி முதல் மூத்த மனிதர் வரை ஒவ்வொருவருக்கும் அந்த குடும்பத்தின் ஒவ்வொருவரின் நிம்மதிக்கான பொறுப்பு இருக்கிறது. அந்த மனநிம்மதியை தர முடியாத பட்சத்திலும் அதை சிதைக்காமல் இருப்பதே பெரும் உதவியாய் இருக்கும்.

ஒன்றுபட்ட வாழ்வில் எத்தனையோ அதிதீவிரமான செயல்களை எளிமையாக செய்து முடிக்க முடியும். குழந்தைகளின் கல்வி, சமூக அக்கறை, பொறுப்புணர்வு, நேர்மை, பொறுமையென்று உள்ளார்ந்து உயர்த்த வேண்டிய பல்வேறு விசயங்களை தலைகீழாக இந்த குடும்பத்தினர்களே சிதைப்பது பெரும்பாவம்.

இல்லாத கௌரவம், தேவையற்ற கோபம், தனிமனித சுயநலம் என்று குடும்ப வாழ்வியலுக்குள் சிக்கலாய் இருக்கும் இத்தனையையும் உள்ளுக்குள் வைத்துக் கொண்டு, உங்களுக்குப் பின்னே வாழப் போகும் சந்ததிகளின் மனஅமைதியை கலைப்பதிலும், சிக்கல்கள் கொடுப்பதிலும் நீங்கள் காட்டும் ஆர்வத்தை உங்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் காட்டியிருந்தால் நீங்கள் ஒரு மனிதராக கூட மதிக்கப்பட்டிருக்கலாம்.

உங்களிடமிருந்து கற்றுக் கொண்டதில் நான் நிச்சயமாக கடைப்பிடிக்க நினைக்கும் ஒரு விசயம். நீங்கள் எங்களுக்கு நிகழ்த்திய எந்தவொரு எதிர்மறையையும், நான் என்னைச் சார்ந்தவர்களுக்கு நிகழ்த்த மாட்டேன். நீங்கள் சடலங்களாக வாழ்ந்து கொண்டு செய்யும் எந்த அநீதியையும் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்தக் கூட மாட்டேன்.

❣️

மின்மினிகள்

~
இப்படித்தான் மின்மினிப் பூச்சிகள் வெளிச்சத்தில் இருக்குமென்று அறையைத் திறந்து மின்விளக்கை ஒளிரச் செய்த போதுதான் எனக்கே தெரியும். தேனீக்கும், பூவண்டுக்கும் இடையிலான சாயல். இனிமேல், ஆழ்மன எண்ணங்களை மின்மினி என்றுதான் நான் பாவிப்பேன். அவைகளும் இவற்றைப் போல் இருளில்தான் சுதந்திரமாக, பிரகாசமாக மிளிரும். நிறைய பறக்கும், பார்க்க வைக்கும். 

அலைபேசிக்கு உணவு இடைவேளை என்பதால் வாசலில் அமர்ந்திருக்கிறேன். தவளைக் குரலும், தூரத்து நாயின் ஒலியும் ஒரு இருப்பை உணர்த்துகிறது. ஆழ்ந்த உறக்கத்திலும் எட்டு மைல் தொலைவில் கடக்கும் இரயில் சத்தம் இசையாய் இருக்கிறது. பழுதாகிய இசைக்கருவிகள் போல் பூச்சிகளும், வண்டுகளும் கொட்டும் பனிக்கு துதி பாடுகின்றன. யாருக்கு வேண்டும் அமைதி. உலகில் எரிச்சலூட்டும் இரைச்சல் எனக்கு இந்த அமைதிதான்.

மலை நிலங்களும், மழைச் சூழலும் நிறைந்த ஊரில் தனிவீடு கிடைப்பதெல்லாம் வரம். ஆனால், முரண் என்னவென்றால் அதே தனி வீட்டில் நல்ல குளிர்ந்த காலநிலையில் பிடித்தமான, சூடான உணவைத் தின்ன முடியாமல் வீணாக்கும் மனநிலையில் என்னைத் தள்ளி விட்ட இந்த நாட்களில் சிலவற்றைத் தெளிவாக விளங்கிக் கொண்டேன். 

சோம்பேறித்தனத்திற்கும், ஓய்விற்கும் வித்தியாசம் தெரியாமல் நிறைய பேர் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். பேச மறக்குமளவுக்கு ஆளரவமற்று திரிகிறார்கள். பொறுப்பையும், விமர்சனங்களின் மீதான பயத்தையும் சேர்த்து போட்டு குழப்பிக் கொள்கிறார்கள். களைப்பில் மயங்குவதை தான் உறக்கமென்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள். அதை விட மிக முக்கியம் நம்மைச் சுற்றி நிறைய மனிதர்கள் தனிமையில் இருக்கிறார்கள். சிலர் மனிதர்களற்ற வீட்டில், சிலர் மனிதர்களுக்கு மத்தியில்.

❣️

பார்வையும், பாதையும்


~
தூசி நிறைந்த கண் கண்ணாடியை துடைத்தால் மட்டுமே தெரியக்கூடிய சாலையில், வாகனத்தை நிறுத்தாமல் செல்ல வேண்டிய கட்டாயம். மணல் ரோட்டில் கரடுமுரடான சாலைகளில் வண்டியை நிறுத்தி எடுக்க மிகப்பெரிய பொறுமை வேண்டும். வேலை நேரத்தில் எள்ளளவும் என்னிடம் அந்த பொறுமை இருந்ததில்லை.

கண்ணாடியின் இடைவெளியில் பார்வையைத் திணித்து பச்சைப் புற்களையும், மலைகளையும் கண்களால் சூரையாடத் தொடங்கியிருந்தேன். கவனக்குறைவில் ஒரு முட்டுக்கல்லில் மோதி சாய்ந்து விழப்பார்த்து சுதாரித்துக் கொண்டேன். மிதமான வேகத்தில் பாதையையும், பிறவற்றின் மீதான பார்வையையும் சரிசமமாக்கிக் கொண்டேன்.

வெட்டவெளி, மிகப்பெரிய வயல்வெளிகள், கண்ணுக்கெட்டிய தொலைவில் மலைகள், வயல்களுக்கு நடுவே ஓடைகள், இரண்டு பக்கமும் வயல்களை கொண்ட உள்ளூர் பாதைகள், வயலில் பணியாட்கள், ஆங்காங்கே சிறு சிறு கோவில்களென்று கண்களுக்கு கொஞ்சம் ஆசிர்வாதங்கள் வாங்கிக் கொண்டேன்.

கடுமையான வெயில், காலையிலிருந்து உணவருந்தாத களைப்பு, தண்ணீர் தாகம், தூசியும் துகள்களும் நிறைந்த சாலைகள், ஆனாலும் எனக்கு பிடித்தமான பயணமாக ஒவ்வொரு முறை மதிய உணவுக்கு செல்லும் போதும் இதை மாற்றி விடுகிறது இந்த பார்வை. சிலரிடம் தனிப்பட்ட முறையில் நிறைய பேசி முடிக்கும் போது இறுதியாக, எப்படி மகிழ்ச்சியையே தேடித்தேடி செல்கிறாய் என்பார்கள்.

பாதை எப்படி இருந்தாலென்ன, பார்வை நம்முடையதுதானே! ❤

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...