Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Thursday, February 26, 2026

மீட்சி


~

சில நாட்கள சாதாரணமா கடந்துற முடியிறதில்ல. எவ்வளவு இறுக்கி பிடிச்சாலும் சில விசயங்கள மறைச்சிட்டே இருக்க முடியிறதில்ல. சில நினைவுகள மறந்துட்டு நிம்மதியா வாழ்ந்துறதுக்கு மனசும் அனுமதிக்கிறதில்ல. நாட்கள நியாபகம் வச்சிருக்குறதோட மிகப்பெரிய பலகீனம் இது. 


சிலநேரம் மறக்குறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லுவாங்க. அது அப்டியில்ல. மன்னிக்கனும். எந்த விதத்திலும் தன் எண்ணத்தால கூட விரும்பி நேசிச்ச ஒருத்தருக்கு காயத்த குடுக்க கூடாதுன்னு மன்னிச்சிறனும். ஆனா, கடக்க முயற்சி பண்ணி, பண்ணி தோத்துக்கிட்டே இருக்குற ஒருத்தனுக்கு மறக்குறது சாதாரண விசயமில்லல.


இந்த நாள், இத்தன மணி, மதியம், காலைன்னு ஒவ்வொரு நிமிஷமும் அத்தனை அத்தனை எதிர்மறையான நினைவுகளையும் அசைபோட்டு இருந்தாலுல், எந்தவொரு வெளிப்படையான தாக்கத்தையும் நிகழ்த்தாம அமைதியா கடந்து போக ஆயிரம் காரணங்கள் இருக்கும். உடைய ஒரேயொரு தேயாத நினைவு போதும்.


நீங்கள் நேசிக்கக் கூட வேண்டாம். வாழ்வென்பது மிகப்பெரிய சாபமென்று நினைக்கக் கூடிய விளிம்பிற்கு எந்த உயிரையும் நகர்த்தாதிருங்கள்! 

Tuesday, February 17, 2026

தேநீர் மிடறு


~

ஒரு தேநீர் மிடரு போல ஒவ்வொரு மனிதர்களிடமும் பேச விழைகிறேன். சுவாரசியமற்ற மனிதர்களென்று யாருமேயில்லை. ஒவ்வொருவரின் கதையிலும் தனக்கென்றொரு ஒரு கதாநாயகப் பாத்திரம் வைத்துக் கொள்வார்கள். 


நீங்களும் நானும் அப்படித்தான். இங்கு யாருக்கும் உடனிருப்பவனாக இருக்கப் பொருந்தவில்லை. என்னோடு யார் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்றுதான் சொல்ல நினைக்கிறோம். 


நிறைய கதைகள் தனக்கு நடந்தவைகளைச் சுற்றியே பேசும் போது, சுற்றி நடப்பைகளுக்கு இடையில் நாம் என்ன செய்கிறோம் என்று சில முறை யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். உண்மையில் இங்கு யாரும் மையத்திலும் இல்லை, யாரும் வெளியிலும் இல்லை. 


நீங்களும் நானுமாய் ஒரு குவளைத் தேநீர் போல் கலந்து ஒன்றாய்தான் இருக்கிறோம். முதல் மிடருக்கும், இரண்டாம் மிடருக்குமான இடைவெளியில்தான் இத்தனை நேசமும், வாழ்தலும்.

பூஜ்ஜியக்காரன்


என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை நான் பார்த்ததில்லை.


தப்பென்று தெரிந்த அடுத்த கணம் மன்னிப்பு கேட்க தயாராகி விடுவேன்.

கோபத்தில் ஏதேனும் பேசி விட்டால் தூங்குவதற்கு முன் போன் செய்து மன்னிப்பு கேட்பேன்.

பிடித்திருந்தால் யோசிக்காமல் பாராட்டி விடுவேன்.


தூங்குவதற்கு முன் மனதளவில் எல்லோரையும் மன்னித்து விடுவேன்.

ஒரு முழு இரவை ஒருவரின் மீது கோபத்தோடு கடத்தத் தெரியாது.

யாருடைய மனஸ்தாபத்தோடும் அடுத்த நாளை தொடங்க பிடிக்காது.

மகிழ்ச்சியாக வாழ அல்லது சாக மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.


கண்டிப்பாக இன்று இரவு இறந்து விடுவோமென்று, மனதின் ஒரு ஒரத்தில் நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றே பழகிவிட்டது.

அப்படி சாகாமல் விழித்தேன் என்றால் ஒரேயொரு பெரிய ஆசையோடு அடுத்த நாளை தொடங்குவேன்.

கண்டிப்பாக நான் என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை சந்திக்கவே கூடாது.

காதலர் தினம் - 2026


~
யார் யாரோவாக வந்து அவர்களே நமக்கு போதுமானவர்களாக மாறி விடுகிறார்கள். மனிதர்களை நினைவுகளாக்கவும், நியாபக அழிவில் இருந்து மிட்டெடுக்கவும் யாரோ ஒருவர் வந்து விடுகிறார்கள். தனித்து இருந்தால்தான் நிம்மதி என்று சொல்லிக் கொண்டே யாரையாவது தேடிக்கொண்டோ, யாருக்காகவாவது காத்திருந்தோ பழகிவிட்டோம்.

அன்பின் பிடியில் சிக்கி, கொண்டாடிக் களைத்து, சேர்ந்து வளர்ந்து, பிரிவில் இழந்து, நினைவில் வீழ்ந்து, அழுது தீர்த்து, வாழ்வோடு இயைந்து அத்தனையையும் கடந்து அடுத்தடுத்த மனிதனும் அதையே தேடிப் போகிறானென்றால் அது எத்தனை அபூர்வமானதாயிருக்கும்.

ஆயிரம் பேர் திட்டியும், சபித்தும். எத்தனையோ பேர் அனுபவித்தும், எத்தனையோ பேரை வாழ வைத்தும், ஒரு யுகமே கடந்தும் இன்றளவும் சலிக்காத ஒரு விசயத்தைக் குறிப்பிடச் சொன்னால் காதலைத் தவிற வேறெதைக் காட்ட.

காதலித்து மடி ❣️

அந்நியராய்


~
சமரசமற்ற அன்பும், பரிவும் நமக்குள் சரிசமமாக பகிரப்பட்டது. 
நீ, நானென்ற இரு வேறு சூழ்நிலைகளை அழகானதொரு வீடாக மாற்றினோம்.
ஏராளமான மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் வனமாகி வாழ்ந்தோம்.
சுற்றுச்சுவர் அற்ற அருங்காட்சிகமாக பலர் ஆசைப்பட கொண்டாடித் திரிந்தோம். 

புன்முறுவல் தொடங்கி வெடிச்சிரிப்பு வரை உலகிற்கு இலக்கணம் எழுதிக் கொடுத்தோம்.
வெவ்வேறு நிலைப்பாடுகளை விவாதித்து தீர்வோடோ, தீர்வில்லாமலோ அடுத்தடுத்த விவாதங்களை தொடுத்தோம்.
நட்சத்திரங்களை அகற்றி விட்டு வானத்தை முழுமையாக நமதாக்கியதாக கதைகள் பேசியிருந்தோம்.
பேரன்போடு பெருங்காதல் செய்தோம்.

நம்மளவில் எவ்வித விமர்சனங்களும் இல்லாத மனிதர்களாகவே இருந்தோம்.
இருந்தும், அறிமுகமற்ற அந்நியர்களாகவே இருந்துவிட்டுப் போயிருக்கலாம் என்ற நிலைக்குப் போய் நம் பிரிவு நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதே என் வருத்தம்.

❣️

Tuesday, February 3, 2026

மென்மை | மேன்மை


~
மென்மை | மேன்மை

எனக்கு தெரிந்தவர்களில் அதிகம் கோபப்படக்கூடியவர் என் தந்தை. ஆனால், அவர் அடிக்கடி "கோபத்தில் எழுபவன், நஷ்டத்தில் வீழ்வான்" என்று சொல்வார். நானும் இதை அடிக்கடி பயன்படுத்துவேன். இப்படி நமக்கு நாமே சொல்லிக் கொள்வதில் கூட ஒரு நிறைவு இருக்கிறது. இப்படி சொல்வதால் நம்மால் நம் தவறை சரி செய்து கொள்ள முடிகிறது. சரிவர அதன் விகித அளவுகளைக் கண்காணிக்க முடிகிறது. நம்மை நாமே திருத்த முடிகிறது.

எனக்குத் தெரிந்தவரை மிகவும் எளிமையான அதே நேரம் வீரியமான வார்த்தைகள் என்றால் மன்னிப்பும், நன்றியும்தான். நான் தயங்காமல் பயன்படுத்தும் வார்த்தைகளில் முக்கியமானவை இவை இரண்டும்தான். சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதையே குற்றச்சாட்டாக சொல்லும் அளவுக்கு பயனற்ற முறையில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். "நன்றி" என்று தமிழில் சொல்லும் போது சிலர் வித்தியாசமாக பார்ப்பதும் உண்டு.

இன்றைய சூழ்நிலையில் வீடு தொடங்கி உலகம் வரை கடுமையான வக்கிரங்களும், வன்முறையும் நிறைந்திருக்கிறது. இதற்கிடையிலும் பொறுமையைத் தாண்டி கோபத்தை மிகப்பெரிய பலமாகவும், பக்குவத்தைத் தாண்டி கட்டுப்பாடற்ற செயல்முறைகளை வீரமாகவும் பழக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது இந்த சமூகம். சமூக வளைதளம், சினிமாவில் இருந்து தெருவோரத் திண்ணை வரை மெல்லிய வன்முறைகள் பூசிய உரையாடல்களை சந்திக்காமல் நகர முடிவதில்லை.

பொறுமையாளர்களாக பார்த்த நிறைய பேர் கடும் கோபக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். பக்குவமான, தெளிவான நிறைய பேர் குழப்பங்களில் சிக்கி பதட்டமடைகிறார்கள். பதட்டத்தில் தவறுகளை செய்து அதன்பின் தனக்குள்ளேயே பலவீனமானவர்களாக உணர்ந்து விடுகிறார்கள். பலவீனங்களை மறைக்க பிறரையும் மன்னிக்காமல், தன்னையும் மன்னிக்காமல் குழப்பமான தனக்கு பழக்கமில்லாத வன்மங்களை சுமந்து திரிகிறார்கள்.

பணம், தொழில், குடும்பம், சமூக அழுத்தம், தனிமனித உளவியல் சிக்கல் என்று பல்வேறு காரணிகளால் நாம் நாளுக்குநாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சமூகத்தின் சமநிலையில் இந்த மாற்றத்தின் சராசரி விகிதம் வெகுவாக மாறுபட்டுள்ளதை சமீபமாகத்தான் கவனிக்க முடிகிறது. அந்தந்த வயதை தாண்டிய தவறுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. தடுக்க முடியாத அளவுக்கு அல்லது கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குமான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் இடத்தில் சகமனிதர் யாரும் இல்லை. அதிகமான மனிதர்கள் எவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலும் கூட தனிமையாகவே தன் விசயங்களை கையாள விரும்புகிறார்கள். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தனித்தனி பிரச்சனைகளின் எல்லையில் தன் இயல்பைத் தாண்டி யோசிக்காமல் இருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. எதிர்மறையான நிறைய விசயங்கள் இயல்பைத் தாண்டி நடப்பவையே. அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

சமூகத்தில் நெருடலாக இருக்கக் கூடிய விசயங்களைக் கூட, சுட்டிக் காட்டக் கூடிய இடத்தில் நாம் இல்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்தவரை கடினமான வழிகளை, மேம்போக்கான வன்முறையைக் கூட கையில் ஏந்தாமல் மென்மையாக நடந்து கொள்ள முயல்வதே மாற்றத்திற்கான ஆரம்ப வழி. நேர்மறை என்பதன் தொடக்கமே எதிர்மறையாய் இல்லாமல் இருப்பதுதான்.

வன்முறை என்றவுடன் உடல்ரீதியாக பிறருக்கு செய்யக்கூடிய தீங்கு மட்டும்தான் என்று பொருளல்ல. எதிர்மறை எண்ணங்களால், தவறான சிந்தனைகளால், காரணமற்ற பதட்டங்களால் கூட மெல்லிய வன்முறைகள் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு இடையில்தான் கெட்டப் பழக்கங்கள் மனிதர்களை ஆட்கொற்கிறது. இத்தகைய மெல்லிய வன்முறைகள் தனக்குள்ளே தன்னை அழித்துக் கொள்ளக் கூடிய ஆபத்தான விசயமும் கூட. ஒவ்வொரு விளைவின் முந்தைய வினையும் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று நம்புபவன் நான்.

காலத்திற்கு ஏற்றார்போல ஒவ்வொரு மனிதரும் தன் பொறுப்பில் நிதானித்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். மென்மையாக இருப்பதால், பொறுமையாக இருப்பதால் சின்னஞ்சிறிய மாற்றங்களை நமக்குள்ளேயே பார்க்க முடியும். அந்த மாற்றத்தின் மூலம் தன்னை வெறுத்த நிறைய பேர்களால் தன்னையே நேசித்துக் கொள்ள முடியும். தன்னை நேசிக்கத் தொடங்குபவன் எதிர்மறையின் பக்கம் விலக மாட்டான். அதுதான் மேன்மையாளர்களாக வாழ்வதற்கான, நேர்மறையான மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரே வழி என்று நம்புகிறேன்.

மென்மையாய் வாழ்! ❣️

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...