Ameerdeen

My photo
வேண்டியதையும், விருப்பப்பட்டதையும் எழுதித் தீர்க்கிறேன்.

Tuesday, March 10, 2026

ஒன்றுமில்லை


~
இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள்.
மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவியாய் வந்து விழும்  வகிடில் சிக்காத கூந்தலை வயலின் வாசிப்பதைப் போல எடுத்துப் போட்டுக் கொண்டே பேசிக்  கொண்டிருக்கிறாள்.

நீச்சல்குள நீரின் மேல் உலர விடப் போட்டிருக்கும் வேட்டிகளாய் ஆடை விட்டிருந்தது தேநீர்.
அதில் ஆங்காங்கே பாட்டிக் கண்ணங்களாய் சில சுருக்கங்கள்.
கொள்ளை அழகு பொழியும் வனமென்று சரளமாய் வந்து விழும் வார்த்தைகளுக்கு மத்தியில், உதடசைவின் அதிர்வை மட்டுமே உணர முடிந்தது.

இராட்டினத்தைக் காணும் சிறுவனாய் பிரம்மாண்ட பேச்சைப் பூரிப்போடு கேட்க மறந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.
இருள் அடையத் தொடங்கும் போதே வார்த்தைகள் பார்வைக்கு அப்பால் நகரத் தொடங்கியிருந்தது.
கிளியமர்ந்து பறந்த சோளக்காடாய் நிமிர்ந்து அமர்ந்து வார்த்தைகளை பூரிப்போடு பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

உணர்வோடுதான் கேட்கிறானா என்ற குழப்பத்தில் புருவம் உயர்த்தி 'என்ன?' என்பதாக கேள்வி கேட்டாள்.
பேசிக் கொண்டிருந்த வார்த்தைகள் கற்பூரமாய் காணாமல் போக, வலுவிழந்த ஏவுகனையாய் தரையிறங்கியது மனம்.
அன்று நான் சொன்ன 'ஒன்றுமில்லை' என்ற பதிலில் எல்லாமும் இருந்தது.

❣️

Saturday, March 7, 2026

பெண்கள் தினம்


~
பெண் என்பவள் என்று நிறைய விளக்கவுரைகள் சொல்லியும் முடியாத நீட்சியாக எப்போதும் பெண்ணைச் சுற்றிய, பெண்ணை பற்றிய கதைகள் நீண்டு கொண்டேதான் இருக்கிறது. அடுத்தடுத்த தனக்கு நெருக்கமான மனிதர்களை இன்ன இதுதானென்று சொல்லி முடிக்கவியலாத அசாத்திய பிடிப்புகளை தந்து வளர்த்தெடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் பெண்கள்.

ஆணென்பது பிறப்பு, பெண்ணென்பது பவுசு என்று சொல்லுமளவுக்கு ஊர் மெச்ச எத்தனையோ பெண்களை பிள்ளையிலிருந்து, பாட்டி வரை பெருமையாய் பார்த்து வளர்ந்திருக்கிறோம். பெண் இல்லாத நிலை ஆகிப் போனால் ஆணென்பவன் அர்த்தமற்றுப் போவானென்று எப்போதும் தோன்றும். பெண்ணென்பவள் ஆறுதல், பெண்ணென்பவள் விதி. பெண்ணென்பள் பிரியம். பெண்ணென்றாலே திருவிழா.

கவிஞர் வெய்யில் ஒரு மேடையில் சொல்லியிருப்பார்.

"பெண் நிறைவாய் இருப்பவள். அவளுக்கு ஆண் இன்றி எல்லாமும் கிடைத்து விடுகிறது. ஆணிடம்தான் மிகப்பெரிய பிச்சைப் பாத்திரம் இருக்கிறது"

என் பிச்சைப் பாத்திரத்தை நிரப்பிய, அதனைப் பிடுங்கி தரையில் அமர்த்திய, அடித்து திருத்திய, ஆளாக்கி வழிநடத்திய, தலைமேல் தூக்கி வைத்துக் கொண்டாடிய அத்தனை தேவதைகளுக்கும் என் நன்றிக்கடன்களை உரித்தாக்குவேன். வாழ்வெனும் வானில் வண்ண விண்மீன்களாய் பிரகாசிக்கும் பிரியத்திற்குரிய அனைவருக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்.

#HappyWomensDay ❤

Wednesday, March 4, 2026

நாமொரு இம்மி


~
இன்றோ, நாளையோ என்னும் சூழலில் நம் அழிவும், நமக்கான இரங்கலும் நம்மை சூழ்ந்து கொண்டிருக்கிறது. நாளொன்றுக்கு நிறைய மனிதர்கள் கொத்து கொத்தாக அழிந்து கொண்டிருக்கிறார்கள். ஆயுதங்களை ஏந்தி அல்லது தடுத்து போர் செய்வது ஒரு பக்கம் நிகழ்ந்து கொண்டேதான் இருக்கிறது.

தனிப்பட்ட வெறுமையிலும், இடர்களிலும் நம்மை சுற்றி எத்தனையோ பேர்கள் தன்னுள்ளே அழிந்து கொண்டிருக்க நாமும் ஏதோவொரு விதத்தில் பங்கு வகிக்கிறோம் என்று அடிக்கடி தோன்றும். இவற்றில் பெரும்பான்மையான விசயங்களுக்கு வளர்ந்த ஒருவர் தர நினைக்கும் அழுத்தமோ, வளர நினைக்கும் ஒருவருக்கு கொடுக்கப்படும் அழுத்தமோதான் காரணமாய் இருக்கிறது. 

இவைகளுக்கு மத்தியில் நாமும் எதிர்மறையான விசயங்களை போகிற போக்கில் யார் யாரிடமோ தூவி விடத்தான் செய்கிறோம். எனக்கு நெருங்கிய நண்பரொருவர் பிரபஞ்ச அறிவியலைப் பற்றி பேசிக் கொண்டேயிருப்பார். ஆரம்பத்தில் அதில் பெரிய ஈடுபாடு இல்லாமல் இருந்த போதும் இப்போது என் நிறைவை தந்தது அந்த பிரபஞ்ச அறிவே. போதிய அளவு மன அமைதிக்கான வழியாக நான் தேர்ந்தெருத்த ஒரு சூத்திரமும் அது சார்ந்ததுதான். 

"நமக்கு நாமே ஒளி, நமக்குள் நம்மாட்சியே, பிரபஞ்சத்தில் நாமொரு இம்மி, நமக்கான மீட்சி நம்முள் நிறைவாயிருப்பதுவே"

நம்மிலிருந்து நேர்மறையாய் இருக்கத் தொடங்கினால், மென்மையான வாழ்வை நமக்கே அது திருப்பித் தரும். இப்பிரபஞ்சத்தில் நாம் எவ்வளவு மிக மிக மிகச்சிறிய விசயமென்று யோசிக்கும் போது, அத்தனை எதிர்மறையும் அழிந்து அன்பை விதைக்க முடியுமென்று நிச்சயமாக நம்புகிறேன்! ❤

Thursday, February 26, 2026

மீட்சி


~

சில நாட்கள சாதாரணமா கடந்துற முடியிறதில்ல. எவ்வளவு இறுக்கி பிடிச்சாலும் சில விசயங்கள மறைச்சிட்டே இருக்க முடியிறதில்ல. சில நினைவுகள மறந்துட்டு நிம்மதியா வாழ்ந்துறதுக்கு மனசும் அனுமதிக்கிறதில்ல. நாட்கள நியாபகம் வச்சிருக்குறதோட மிகப்பெரிய பலகீனம் இது. 


சிலநேரம் மறக்குறதுதான் எல்லாருக்கும் நல்லதுன்னு சொல்லுவாங்க. அது அப்டியில்ல. மன்னிக்கனும். எந்த விதத்திலும் தன் எண்ணத்தால கூட விரும்பி நேசிச்ச ஒருத்தருக்கு காயத்த குடுக்க கூடாதுன்னு மன்னிச்சிறனும். ஆனா, கடக்க முயற்சி பண்ணி, பண்ணி தோத்துக்கிட்டே இருக்குற ஒருத்தனுக்கு மறக்குறது சாதாரண விசயமில்லல.


இந்த நாள், இத்தன மணி, மதியம், காலைன்னு ஒவ்வொரு நிமிஷமும் அத்தனை அத்தனை எதிர்மறையான நினைவுகளையும் அசைபோட்டு இருந்தாலுல், எந்தவொரு வெளிப்படையான தாக்கத்தையும் நிகழ்த்தாம அமைதியா கடந்து போக ஆயிரம் காரணங்கள் இருக்கும். உடைய ஒரேயொரு தேயாத நினைவு போதும்.


நீங்கள் நேசிக்கக் கூட வேண்டாம். வாழ்வென்பது மிகப்பெரிய சாபமென்று நினைக்கக் கூடிய விளிம்பிற்கு எந்த உயிரையும் நகர்த்தாதிருங்கள்! 

Tuesday, February 17, 2026

தேநீர் மிடறு


~

ஒரு தேநீர் மிடரு போல ஒவ்வொரு மனிதர்களிடமும் பேச விழைகிறேன். சுவாரசியமற்ற மனிதர்களென்று யாருமேயில்லை. ஒவ்வொருவரின் கதையிலும் தனக்கென்றொரு ஒரு கதாநாயகப் பாத்திரம் வைத்துக் கொள்வார்கள். 


நீங்களும் நானும் அப்படித்தான். இங்கு யாருக்கும் உடனிருப்பவனாக இருக்கப் பொருந்தவில்லை. என்னோடு யார் வேண்டுமானாலும் இருந்து கொள்ளட்டும் என்றுதான் சொல்ல நினைக்கிறோம். 


நிறைய கதைகள் தனக்கு நடந்தவைகளைச் சுற்றியே பேசும் போது, சுற்றி நடப்பைகளுக்கு இடையில் நாம் என்ன செய்கிறோம் என்று சில முறை யோசிக்க முயற்சி செய்திருக்கிறேன். உண்மையில் இங்கு யாரும் மையத்திலும் இல்லை, யாரும் வெளியிலும் இல்லை. 


நீங்களும் நானுமாய் ஒரு குவளைத் தேநீர் போல் கலந்து ஒன்றாய்தான் இருக்கிறோம். முதல் மிடருக்கும், இரண்டாம் மிடருக்குமான இடைவெளியில்தான் இத்தனை நேசமும், வாழ்தலும்.

பூஜ்ஜியக்காரன்


என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை நான் பார்த்ததில்லை.


தப்பென்று தெரிந்த அடுத்த கணம் மன்னிப்பு கேட்க தயாராகி விடுவேன்.

கோபத்தில் ஏதேனும் பேசி விட்டால் தூங்குவதற்கு முன் போன் செய்து மன்னிப்பு கேட்பேன்.

பிடித்திருந்தால் யோசிக்காமல் பாராட்டி விடுவேன்.


தூங்குவதற்கு முன் மனதளவில் எல்லோரையும் மன்னித்து விடுவேன்.

ஒரு முழு இரவை ஒருவரின் மீது கோபத்தோடு கடத்தத் தெரியாது.

யாருடைய மனஸ்தாபத்தோடும் அடுத்த நாளை தொடங்க பிடிக்காது.

மகிழ்ச்சியாக வாழ அல்லது சாக மன்னிக்கவும், மன்னிப்பு கேட்கவும் தயாராக இருக்க வேண்டும்.


கண்டிப்பாக இன்று இரவு இறந்து விடுவோமென்று, மனதின் ஒரு ஒரத்தில் நினைத்துக் கொண்டு உறங்கச் சென்றே பழகிவிட்டது.

அப்படி சாகாமல் விழித்தேன் என்றால் ஒரேயொரு பெரிய ஆசையோடு அடுத்த நாளை தொடங்குவேன்.

கண்டிப்பாக நான் என்னைப் போன்ற சுழியமான மனநிலை கொண்ட மனிதனை சந்திக்கவே கூடாது.

காதலர் தினம் - 2026


~
யார் யாரோவாக வந்து அவர்களே நமக்கு போதுமானவர்களாக மாறி விடுகிறார்கள். மனிதர்களை நினைவுகளாக்கவும், நியாபக அழிவில் இருந்து மிட்டெடுக்கவும் யாரோ ஒருவர் வந்து விடுகிறார்கள். தனித்து இருந்தால்தான் நிம்மதி என்று சொல்லிக் கொண்டே யாரையாவது தேடிக்கொண்டோ, யாருக்காகவாவது காத்திருந்தோ பழகிவிட்டோம்.

அன்பின் பிடியில் சிக்கி, கொண்டாடிக் களைத்து, சேர்ந்து வளர்ந்து, பிரிவில் இழந்து, நினைவில் வீழ்ந்து, அழுது தீர்த்து, வாழ்வோடு இயைந்து அத்தனையையும் கடந்து அடுத்தடுத்த மனிதனும் அதையே தேடிப் போகிறானென்றால் அது எத்தனை அபூர்வமானதாயிருக்கும்.

ஆயிரம் பேர் திட்டியும், சபித்தும். எத்தனையோ பேர் அனுபவித்தும், எத்தனையோ பேரை வாழ வைத்தும், ஒரு யுகமே கடந்தும் இன்றளவும் சலிக்காத ஒரு விசயத்தைக் குறிப்பிடச் சொன்னால் காதலைத் தவிற வேறெதைக் காட்ட.

காதலித்து மடி ❣️

அந்நியராய்


~
சமரசமற்ற அன்பும், பரிவும் நமக்குள் சரிசமமாக பகிரப்பட்டது. 
நீ, நானென்ற இரு வேறு சூழ்நிலைகளை அழகானதொரு வீடாக மாற்றினோம்.
ஏராளமான மனிதர்களுக்கும், பறவைகளுக்கும் வனமாகி வாழ்ந்தோம்.
சுற்றுச்சுவர் அற்ற அருங்காட்சிகமாக பலர் ஆசைப்பட கொண்டாடித் திரிந்தோம். 

புன்முறுவல் தொடங்கி வெடிச்சிரிப்பு வரை உலகிற்கு இலக்கணம் எழுதிக் கொடுத்தோம்.
வெவ்வேறு நிலைப்பாடுகளை விவாதித்து தீர்வோடோ, தீர்வில்லாமலோ அடுத்தடுத்த விவாதங்களை தொடுத்தோம்.
நட்சத்திரங்களை அகற்றி விட்டு வானத்தை முழுமையாக நமதாக்கியதாக கதைகள் பேசியிருந்தோம்.
பேரன்போடு பெருங்காதல் செய்தோம்.

நம்மளவில் எவ்வித விமர்சனங்களும் இல்லாத மனிதர்களாகவே இருந்தோம்.
இருந்தும், அறிமுகமற்ற அந்நியர்களாகவே இருந்துவிட்டுப் போயிருக்கலாம் என்ற நிலைக்குப் போய் நம் பிரிவு நிகழ்ந்திருக்கக் கூடாது என்பதே என் வருத்தம்.

❣️

Tuesday, February 3, 2026

மென்மை | மேன்மை


~
மென்மை | மேன்மை

எனக்கு தெரிந்தவர்களில் அதிகம் கோபப்படக்கூடியவர் என் தந்தை. ஆனால், அவர் அடிக்கடி "கோபத்தில் எழுபவன், நஷ்டத்தில் வீழ்வான்" என்று சொல்வார். நானும் இதை அடிக்கடி பயன்படுத்துவேன். இப்படி நமக்கு நாமே சொல்லிக் கொள்வதில் கூட ஒரு நிறைவு இருக்கிறது. இப்படி சொல்வதால் நம்மால் நம் தவறை சரி செய்து கொள்ள முடிகிறது. சரிவர அதன் விகித அளவுகளைக் கண்காணிக்க முடிகிறது. நம்மை நாமே திருத்த முடிகிறது.

எனக்குத் தெரிந்தவரை மிகவும் எளிமையான அதே நேரம் வீரியமான வார்த்தைகள் என்றால் மன்னிப்பும், நன்றியும்தான். நான் தயங்காமல் பயன்படுத்தும் வார்த்தைகளில் முக்கியமானவை இவை இரண்டும்தான். சில நேரங்களில் மன்னிப்பு கேட்பதையே குற்றச்சாட்டாக சொல்லும் அளவுக்கு பயனற்ற முறையில் மன்னிப்பு கேட்டிருக்கிறேன். "நன்றி" என்று தமிழில் சொல்லும் போது சிலர் வித்தியாசமாக பார்ப்பதும் உண்டு.

இன்றைய சூழ்நிலையில் வீடு தொடங்கி உலகம் வரை கடுமையான வக்கிரங்களும், வன்முறையும் நிறைந்திருக்கிறது. இதற்கிடையிலும் பொறுமையைத் தாண்டி கோபத்தை மிகப்பெரிய பலமாகவும், பக்குவத்தைத் தாண்டி கட்டுப்பாடற்ற செயல்முறைகளை வீரமாகவும் பழக்கப்படுத்திக் கொண்டேதான் இருக்கிறது இந்த சமூகம். சமூக வளைதளம், சினிமாவில் இருந்து தெருவோரத் திண்ணை வரை மெல்லிய வன்முறைகள் பூசிய உரையாடல்களை சந்திக்காமல் நகர முடிவதில்லை.

பொறுமையாளர்களாக பார்த்த நிறைய பேர் கடும் கோபக்காரர்களாக மாறியிருக்கிறார்கள். பக்குவமான, தெளிவான நிறைய பேர் குழப்பங்களில் சிக்கி பதட்டமடைகிறார்கள். பதட்டத்தில் தவறுகளை செய்து அதன்பின் தனக்குள்ளேயே பலவீனமானவர்களாக உணர்ந்து விடுகிறார்கள். பலவீனங்களை மறைக்க பிறரையும் மன்னிக்காமல், தன்னையும் மன்னிக்காமல் குழப்பமான தனக்கு பழக்கமில்லாத வன்மங்களை சுமந்து திரிகிறார்கள்.

பணம், தொழில், குடும்பம், சமூக அழுத்தம், தனிமனித உளவியல் சிக்கல் என்று பல்வேறு காரணிகளால் நாம் நாளுக்குநாள் மாறிக் கொண்டேதான் இருக்கிறோம். ஆனால், சமூகத்தின் சமநிலையில் இந்த மாற்றத்தின் சராசரி விகிதம் வெகுவாக மாறுபட்டுள்ளதை சமீபமாகத்தான் கவனிக்க முடிகிறது. அந்தந்த வயதை தாண்டிய தவறுகள் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது. தடுக்க முடியாத அளவுக்கு அல்லது கண்டுபிடிக்கவே முடியாத அளவுக்கு குற்றங்கள் நடக்கிறது.

ஒவ்வொரு மனிதனுக்குமான பிரச்சனைகளுக்கு முடிவெடுக்கும் இடத்தில் சகமனிதர் யாரும் இல்லை. அதிகமான மனிதர்கள் எவ்வளவு கூட்டத்திற்கு நடுவிலும் கூட தனிமையாகவே தன் விசயங்களை கையாள விரும்புகிறார்கள். அது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால், தனித்தனி பிரச்சனைகளின் எல்லையில் தன் இயல்பைத் தாண்டி யோசிக்காமல் இருக்கலாம் என்பதே என் நிலைப்பாடு. எதிர்மறையான நிறைய விசயங்கள் இயல்பைத் தாண்டி நடப்பவையே. அப்படி நடந்து கொள்ளாமல் இருக்கத்தான் ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டுமென்று நினைக்கிறேன்.

சமூகத்தில் நெருடலாக இருக்கக் கூடிய விசயங்களைக் கூட, சுட்டிக் காட்டக் கூடிய இடத்தில் நாம் இல்லாமல் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறோம். நம்மால் முடிந்தவரை கடினமான வழிகளை, மேம்போக்கான வன்முறையைக் கூட கையில் ஏந்தாமல் மென்மையாக நடந்து கொள்ள முயல்வதே மாற்றத்திற்கான ஆரம்ப வழி. நேர்மறை என்பதன் தொடக்கமே எதிர்மறையாய் இல்லாமல் இருப்பதுதான்.

வன்முறை என்றவுடன் உடல்ரீதியாக பிறருக்கு செய்யக்கூடிய தீங்கு மட்டும்தான் என்று பொருளல்ல. எதிர்மறை எண்ணங்களால், தவறான சிந்தனைகளால், காரணமற்ற பதட்டங்களால் கூட மெல்லிய வன்முறைகள் நிகழ நிறைய வாய்ப்பிருக்கிறது. இதற்கு இடையில்தான் கெட்டப் பழக்கங்கள் மனிதர்களை ஆட்கொற்கிறது. இத்தகைய மெல்லிய வன்முறைகள் தனக்குள்ளே தன்னை அழித்துக் கொள்ளக் கூடிய ஆபத்தான விசயமும் கூட. ஒவ்வொரு விளைவின் முந்தைய வினையும் நம்மில் இருந்துதான் தொடங்க வேண்டும் என்று நம்புபவன் நான்.

காலத்திற்கு ஏற்றார்போல ஒவ்வொரு மனிதரும் தன் பொறுப்பில் நிதானித்து அடுத்த கட்டத்திற்கு நகர வேண்டும். மென்மையாக இருப்பதால், பொறுமையாக இருப்பதால் சின்னஞ்சிறிய மாற்றங்களை நமக்குள்ளேயே பார்க்க முடியும். அந்த மாற்றத்தின் மூலம் தன்னை வெறுத்த நிறைய பேர்களால் தன்னையே நேசித்துக் கொள்ள முடியும். தன்னை நேசிக்கத் தொடங்குபவன் எதிர்மறையின் பக்கம் விலக மாட்டான். அதுதான் மேன்மையாளர்களாக வாழ்வதற்கான, நேர்மறையான மனிதர்களை உருவாக்குவதற்கான ஒரே வழி என்று நம்புகிறேன்.

மென்மையாய் வாழ்! ❣️

Wednesday, January 14, 2026

நீயென் நிலம்!


~
எனக்கு உன்னை எவ்வளவு பிடிக்குமென்று நான் சொன்ன, செய்த ஒவ்வொன்றையும் நினைவு கூர்ந்து எனக்கும் படிப்பினையாக்கி நிரூபிக்கிறாய். உனக்கிது நியாயமற்று தெரியவில்லையா என்பதுதான் என் முதல் கேள்வி. இருந்தும் அதை விடுத்து இன்னொன்றை கேட்க விழைகிறேன்.

உன்னை பிடித்தே ஆக வேண்டிய கட்டாயத்திற்குள் என்னை நிறுத்திய உனக்கென்ன உரிமை இருக்கிறது என் மறைமுகப் பிரியங்களை கேள்வி கேட்பதற்கு. உன்னை என்னோடிருக்கச் சொல்லி எப்போதும் நான் வேண்டியதே இல்லையே.

நான் உன் இன்மையில் பிரியங்கொண்டாடிக் கிடந்தவன். எனக்கு நீ இல்லாதிருத்தலிலும் உன் நிலையை உணர்ந்து, வாழ்ந்து, வீழ்ந்து, மீள முடியும். அன்றி நீ இல்லாத வாழ்வென்பது என் சாபமென்றெல்லாம் நான் நினைத்ததே இல்லை.

நீ இல்லை என்பது ஒரு எலும்பு போர்த்திய சதைப் பிண்டமும், அதைச் சுற்றிய உடையும், பிரகாசமான ஒளியும், இல்லை என்பதேயாகும். உண்மையில் அப்படியான சூழலில் நீயெனக்கு இல்லாமல் போவதற்கான வாய்ப்பே இல்லை. அப்படி நான் உன்னை அணுகியதே இல்லை.

நீ இல்லாத நிலை வருமென்றால் அப்போது வெங்காயம் வெட்டாமல் அழுது கொண்டிருப்பேன், தலைக்கோத என் கையையே நாடுவேன், தலையணையை அணைத்துக் கொள்வேன், இறுதியாக நியாபகத் தீயில் என்னைச் சுட்டு வீழ்த்தி மறையச் செய்வேன்.

இப்படி நீ என்னோடு இல்லாதிருக்க இத்தனை வழி இருந்தும், இருக்க விழையும் உன்னைத்தான் இருக்க வேண்டாமென்று சொல்லிக் கொண்டே இருக்கிறேன். மீண்டும் மீண்டும் சொல்கிறேன். இல்லாமல் போயெல்லாம் உன்னால் என்னை வருத்த முடியாது. நீ இருந்துதான் ஆக வேண்டுமென்பதற்கு நீ இந்த என் ராணியல்ல, நிலம்!

❣️

சுவை


~
"நாங்க நிறையா சாப்டுவோம்" என்பதாக என் நண்பர்களை நான் அறிமுகம் செய்வதுண்டு. நிறைய என்றால் அதிகம் என்று பொருளல்ல. ஒவ்வொரு சந்திப்புக்கும் ஏதாவதொரு தேநீர் கடை அல்லது உணவகத்தை தேர்ந்தெடுத்தே பழகிவிட்டது. எனக்கு தனியாய் சாப்பிட வராது. தனியாக பேச முடியாது, பேச முடிந்திருந்திருந்தால் என் அதிகபட்சமான நேரங்கள் தனிமையிலேயே இருந்திருக்கும். நான் மனிதர்களைத் தேடிப் போவதே பேசுவதற்குத்தான். 

பேசப் பிடித்த அளவுக்கு சாப்பிடப் பிடிக்கும். இதில் முரண் என்னவென்றால் தனியாக சாப்பிட முடியும் என்றாலும் எனக்கு சாப்பிட வராது. எதோவொரு விதத்தில் தனிமையின் உணவில் ஒரு திருப்தி கிடைக்காது எனக்கு. கண்டிப்பாக பரிமாறிக் கொள்ள பார்த்துக் கொண்டே சாப்பிட யாரோவொரு சக மனிதர் வேண்டுமெனக்கு. வேலையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக அதற்கும் என்னை பழக்கப்படுத்திக் கொண்டிருக்கிறேன். 

எனக்கு அன்பின் வெளிப்பாடு என்ற குறிப்பே உணவிலிருந்துதான் தொடங்கும். ஒவ்வொரு மனிதரோடு சென்ற உணவுக்கடைகளையும் மறக்காமல் நினைவில் வைத்திருப்பேன். சிலநேரம் சுவை கூட நினைவிருக்கும். என் பெருங்காதலை உணவின் ரீதியில்தான் வெளிப்படுத்த முயல்வேன். சமைத்துத் தருபவர்களை ஒரு அடி நெருக்கமானவர்களாக மனதுக்குள் நியாபகம் வைத்திருப்பேன். 

உண்மையில் அத்தனை போதைப் பழக்கங்களுக்கு மத்தியில் சோற்றுக்கு செத்தவனாக இருப்பது சாலச்சிறந்தது. உணவை மனிதர்களோடு சேர்ந்து கொண்டாடுவதில் நிறைய நிறைவான நினைவுகளை சேமித்துக் கொள்ள முடியும். சாப்பிட, பேச மறுக்கும் நிலை எனக்குள் வருமேயானால் அன்று என் இயல்பில் இருந்து நான் விலகியிருக்கிறேன் என்று பொருள்.

என்னை நினைவு கூறும் ஒவ்வொரு மனிதருக்கும் வெவ்வேறு உணவின் சுவை! ❤

கண்ணுக்கெட்டா


~
யாரையும் வெறுக்குறதுக்கு தயாரா இல்லாத போது அல்லது இவங்கள நாம வெறுத்துற கூடாதுன்னு எனக்குள்ள தோனும் போது நா தேர்ந்தெடுக்குற விசயம் இந்த அலட்சியம் தான். அதாவது கண்டுக்காம இருக்குறது. நாம பொருட்படுத்தாத எல்லாரோட எதிர்மறையையும் நாம எளிமையா கடந்துருவோம். நம்ம கவனத்துக்கு அது வராது. 

ஒருத்தர நாம பொருட்படுத்தும் போதுதான் அவங்களோட சின்னச் சின்ன விசயங்கள் கூட நம்மள பாதிக்கிது. அத மாத்தனும்ன்னா தூக்கி சுமக்குறதோ, முழுசா பொருந்திப் போறதோ இல்லாம கண்டுக்காம இருக்குறதுதான் சுலபமான வழி. சிலநேரம் அது கஷ்டமாவும் இருக்கும். எப்டி நெருக்கமானவங்கள கண்டுக்காம இருக்குறதுன்னு குழப்பமா இருக்கும்.

நீங்க, உங்களோட நன்மை தீமையான செயல்கள், அன்றாட வாழ்வியல்ன்னு எத பத்தின எந்தவொரு கருத்தும் எனக்கு கிடையாது. அது உங்களுடைய தனிப்பட்ட விசயம்ன்னு தள்ளி நின்னு வேடிக்கை பார்க்க தொடங்குறதுல தான் இது தொடங்கும். நிறையா நேரத்துல குற்றவுணர்ச்சிய தூண்டாம இருக்கவோ, நம்ம நிம்மதிய கெடுத்துக்காம இருக்கவோ அலட்சியம்ங்குறது பெரிய வழி.

ஒரு விதத்துல அவங்களுக்கும் நீங்க செய்யக்கூடிய நல்ல விசயமும் அதுதான். விருப்பமான ஒருத்தரால வெறுக்கப்படுறத யாருமே விரும்ப மாட்டாங்கல்ல. ஒரு அளவுக்கு மீறி தாங்குறதும் தப்புதான், ஒரு அளவுக்கு மீறி குடுக்குறதும் தப்புதான். நீங்க என்னவா நடத்தப் படுறீங்களோ அதுவா நீங்க இருக்குறத விட, என்னவா நடத்தப்படனும்ன்னு நினைக்கிறீங்களோ அதுவா இருக்குறதான் நல்லது.

"யாரையும் பொருட்படுத்துவதற்கில்லை, பொருட்படுத்தும் அளவுக்கு இங்கு எதுவுமில்லை"

Indifference is a better option than Hatred!

Tuesday, January 13, 2026

போர்வையின் நினைவு!

~
மிகச்சிறிய போர்வைக்குள் எத்தனை விதமான நினைவலைகள். கோபம், கவலை, வருத்தம், தயக்கம், காதல் தொடங்கி தேடல் வரை அத்தனையையும் தாங்கி நிற்கிறது அந்த போர்வை.

கதகதப்புக்கென்று கொஞ்சம் இழுத்துப் போர்த்திக் கொள்கிறேன். ஒவ்வொரு இழுப்புக்கும் ஒரு அடி நெருங்கி வந்து வெவ்வேறு விதமான உரையாடல்களை நிகழ்த்தி விட்டுப் போகிறது உன் நினைவு.

முதல் இழுப்பில் என்னோடு இருந்த நீ, இரண்டாவதில் கொஞ்சம் தள்ளி அமர்ந்து கொண்டாய். மூன்றாவது இழுப்பில் கண்ணத்தில் இரண்டு அறைகளும், நான்காவதில் தூங்குடா என்ற வார்த்தையும் சொல்லி கால் பிடித்து விட்டாய். காலில் இருக்கமாய் சுருண்டிருந்த போர்வை மேல் தூக்கி தலைக்கும் சேர்த்து போர்த்தினேன்.

முற்றும் இருளும், கடுங்குளிரின் மீள்விற்கு கொஞ்சம் கதகதப்பும் தந்து விட்ட போர்வைக்குள் இறுதியாக நீயொரு முத்தத்திற்கு நெற்றிக்கு தந்து விட்டு மூச்சுக்காற்றை உள்ளூறப் பரவிட செய்தாய்.

ஒவ்வொரு இரவுக்குள்ளும் ஓராயிரம் நினைவிருக்கும். போர்வை போர்த்திய மனிதருக்கும் எத்தனையோ கதைகளிருக்கும். போர்வை தரும் கதகதப்பை யாரோவொருவரின் நினைவுக்கு பரைசாற்றி விட முடிந்தால் எல்லா இரவையும் நிம்மதியாக கடந்து விடலாம்தானே!

நலமாயிருக்கிறாய்தானே?


~
பிரிதொரு நன்னாளில் நாம் சந்தித்தோம். தேநீர் அருந்தி, தோளுரச அமர்ந்து கதை பேசி மகிழ்ந்தோம். ஒவ்வொரு மிடறிலும் கொஞ்சம் ஏக்கமும், சொல்லாமல் விட்ட சில வார்த்தைகளையும் அருந்தி இறுதியாய் நினைவை மென்று ஏப்பம் விட்டோம். உரையாடல் இலகுவாகும் போது முட்டாளாய் முடிவெடுத்து விட்டோம் என்று நம்மை நாமே எள்ளி நகையாடினோம். 

எல்லாம் நன்மைக்குத்தான் என்று ஆறுதலும் அடைந்து கொண்டோம். சுற்றம், நட்பென்று அத்தனையையும் விசாரித்து ஆர்வமாக தெரிந்து கொண்டோம். இன்றைய ஆசைகளையும், நேற்றைய கடமைகளையும் கேட்டு அறிந்து கொண்டோம். இருவரின் கணிப்பின் படி இருவரும் வளர்ந்திருக்கிறோமா என்று சுய பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டோம். வழக்கம் போல நீ கொடு என்று தேநீருக்கான காசை மாறி மாறி பொறுப்போற்றோம். 

இறுதியாக தயங்கி தயங்கி கேட்டுக் கொண்டதற்கு புன்னகையை மட்டுமே பதிலளித்து மீண்டும் விலகிச் சென்றோம். பிரியத்திற்கு உள்ளான யாரையும் வெறுக்க முடிவதில்லை, விலகிச் சென்ற யாரையும் நெருங்க முடிவதில்லை. அன்றைய கடைசி கேள்வியில் நிகழ்ந்த அத்தனை கோபங்களையும், சேமித்த அத்தனை பிரியங்களையும் கடந்து நம் மீதான அலாதி அக்கறை அப்பட்டமாய் தெரிந்தது.

நலமாயிருக்கிறாய்தானே! ❤

Wednesday, October 29, 2025

நிறைவாய் மனிதா!


~
இன்றைய கால வளர்ச்சியின் அடிப்படையான விசயமாக எனக்கு தெரியக்கூடிய மனித பண்புகள் அன்பும், ஏற்றுக் கொள்ளுதலும். இவை இரண்டை சரியாக கையாண்டுதான் இத்தனை காலம் உலகம் இவ்வளவு வளர்ந்து நிற்கிறதென்று தோன்றுகிறது. அன்பு என்பதற்கான காரணத்தை காதல், புணர்ச்சி, உறவுகள் என்று நிறைய வகையில் விவரிக்க முடியும். ஏற்றுக்கொள்ளுதல் அப்படியே அன்பிற்கு மாற்றான ஒன்று. ஆனால், அது எப்படி உதவியிருக்கும் என்று கேள்வி வரலாம்.

ஒரு கட்டுரையில் படித்தபோது ஒவ்வொரு தனிமனிதனின் கணிவுள்ளம் தான் இந்த மனித இனத்தின் ஆரம்பகாலம் முதல் இன்றைய வளர்ச்சி வரை அடிப்படை விசயமாக இருந்திருக்கிறது என்று சொல்லப்பட்டிருந்தது. பழங்காலங்களில் மனிதர்கள் காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது ஏதேனும் காயப்பட்டாலோ, நோய்வாய்ப்பட்டாலோ அந்த காலகட்டத்தில் அவர்களை பார்த்துக் கொள்ளக்கூடிய வசதி யாருக்கும் இருந்ததில்லை. பல்வேறு இடையூறுகளுக்கு நடுவிலும் நோய்வாய்ப்பட்ட மனிதர்களை பராமரித்து பார்த்துக் கொண்டு பின்னர் அவர்கள் இயல்பு நிலைக்கு திரும்பியதாக சில தடயவியல் சான்றுகளும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசயத்தை ஒரு பக்கம் வைத்துக் கொள்ளலாம். இன்றைய சூழ்நிலையில் மனிதர்களுக்கும், இயற்கைக்கும் அடிப்படையான தேவை என்னவென்று பார்க்கப் போனால் கணிவு என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. கணிவு என்றவுடன் ஒரு குழந்தை நாய்க்கு பிஸ்கட் போடுவது போலவும், கண் தெரியாத ஒருவருக்கு ஒரு கல்லூரி மாணவி வழிகாட்டுவது போலவும் கற்பனைகள் வரலாம். அப்படியான கற்பனைகளுக்கு தான் நாம் பழக்கப்படுத்தப்பட்டு இருக்கிறோம்.

ஆனால், கணிவு என்பது அதோடு நின்று விடுவதல்ல. எங்கோ ஒரு இனஅழிப்பு நடக்கிறது என்று தெரியும் போது அதற்கு எதிராக நாம் என்ன செய்ய முடியுமென்று யோசிப்பதும் கணிவான உள்ளத்தின் வேறொரு பரிணாமம்தான். ஒவ்வொரு மரணத்திற்கும், இழப்பிற்கும் நாம் மன்னிப்பை உணர்வதும் கணிவான உள்ளத்தின் வகைப்பாடுதான், ஒவ்வொரு முறை மனதிற்கு இரக்க நிலை வருவதும் கணிவுடைய வெளிப்பாடுதான். கணிவு என்பது இவ்வுலகில் அத்தியாவசியமான விசயமாக இன்றைக்கும் இருந்து கொண்டுதான் இருக்கிறது என்பதை கண்டிப்பாக மறுக்க முடியாது.

ஏற்றுக்கொள்ளுதல் என்பதை பொருந்திக் கொள்ளுதல் (Adapted) என்றும் சொல்வார்கள். அடுத்தவர்களுக்கு நாம் செய்யக்கூடிய விசயம் கணிவு என்பது போல, நமக்கு நாமே செய்யக்கூடிய விசயம் இந்த பொருந்திக் கொள்ளுதல். இழப்பையும், வலியையும், சஞ்சலங்களையும் பொருந்திக் கொள்ளுதல் என்பது நமக்கு நாமே செய்து கொள்ளக்கூடிய அதே நேரம் நம்மை சுற்றியிருப்பவர்களுக்கு தேவையான விசயமாகவும் இருக்கிறது. அதை செய்து மீண்டு வந்த நிறைய பேர் இன்று தன்னோடு சேர்த்து தன்னைச் சார்ந்தவர்களையும் வாழ வைத்திருக்கிறார்கள்.

பொருந்திக் கொள்ளுவதன் மூலம் வருத்தம் கோபமாக மாறாது. கோபம் வெறுப்பாக மாறாது. வெறுப்பு வன்மமாக மாறாது. சோகம் கூட வலியாக மாறாது. மாறாமல் இயல்பிலேயே நம் இழப்புகளை கையாள இந்த பொருந்திக் கொள்ளுதல் பண்பு பேருதவியாக இருக்கும். நமக்காக அத்தனை எதிர்மறையையும் பொருந்திக் கொண்டு, பிறருக்காக கணிவுள்ளத்தோடு நேர்மறையை மட்டும் பரிமாறினால் நிச்சயம் அனைவருக்கும் நிம்மதி கிடைக்கும். ஒவ்வொருவரும் இதை தனக்கான வெவ்வேறு சூழ்நிலைகளில் வெவ்வேறு விதமாக எடுத்துக் கொள்ளலாம். 

சிறுவயதில் இருந்து தன்னை விட கடினமான சூழலில் இருப்பவர்களை பார்த்து மனநிறைவு கொள்ள வேண்டுமென்று பயிற்றுவிக்கப்பட்ட கணிவான சமூகம் நம்முடையது. வக்கிரமான எத்தனையோ விசயங்கள் தினந்தோறும் தெரியவந்து கொண்டிருந்தாலும், கணிவான கோடானகோடி மனிதர்களோடுதான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அவர்களால்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்றும் கூட சொல்லலாம். கணிவும், அன்புமே மனிதர்களின் இயற்கையான குணமும் கூட. யாரோவொருவருக்காவது நல்லவர்களாக இருக்கதான் நாம் முயற்சித்துக் கொண்டும் இருக்கிறோம். இங்கு அத்தனை நேர்மறையை அடைவதற்கும் ஏகப்பட்ட வழி இருக்கிறது. எல்லாவற்றிற்கும் முன்பு நமக்கு நாம் செய்ய வேண்டிய நியாயம் நாம் மகிழ்ச்சியாய், நிறைவாய் உணர வேண்டுமென்ற எண்ணம் கொள்வது.

நிறைவாய் மனிதா! 

ஒன்றுமில்லை

~ இருப்பை மெருகேற்றும் படி ஏதேதோ உலறத் தொடங்கி காதல் பாஷைகள் பேசிக் கொண்டிருக்கிறாள். மின்மினிக் கண்களைச் சிமிட்டிக் கொண்டே அருவ...